தடதடக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! உடைத்து எறியப்பட்ட 11 செல்போன்கள்! மொத்தத்தையும் மீட்டு விசாரணை!
சென்னை: சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வரை கொலை வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் போலீசார் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொலையின் போது கொலையாளிகள் பயன்படுத்திய 11 செல்போன்களை மீட்டுள்ள போலீசார், அதிலிருந்த தகவல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் . அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதிமுக நிர்வாகியான மலர்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டார். இதேபோல கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கொலை வழக்கில் ஏற்கனவே கைதான அருளின் செல்போனை வைத்திருந்த கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடியான சம்போ செந்திலுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளையும் கொலைக்கு திட்டமிட்டவர்களையும் ஹரிஹரன் ஒருங்கிணைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்களை ஹரிஹரன் கூவம் ஆற்றில் வீசியதாக கூறப்பட்டது. அவற்றை ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின் போலீசார் மீட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் வீசப்பட்ட கொலையாளிகளின் 11 செல்போன்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அவற்றை கொலையாளிகளும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் உடைத்து வீசி உள்ளனர். தற்போது அந்த செல்போன்களை மீட்டெடுத்துள்ள போலீசார் அதன் ஐஎம்இஐ நம்பரை வைத்து அதில் பயன்படுத்தப்பட்ட சிம்கார்டுகள், யார் யாருக்கு பேசப்பட்டது, மெசேஜ்கள், வாட்ஸாப் உரையாடல்கள், உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சைபர் கிரைம் வல்லுநர்களின் உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications