சென்னை அண்ணா நகர், கோயம்பேட்டில் 55 ஸ்பாக்களுக்கு சீல் வைப்பு.. போலீஸ் அதிரடி ஆக்ஷனின் பின்னணி
சென்னை: சென்னை அண்ணாநகர், கோயம்பேடு பகுதிகளில் உரிமம் இன்றி இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸ் சோதனை நடத்திய நிலையில், சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் கடந்த ஒரு மாதத்தில் சீல் வைத்தனர்.
சென்னையில் ஸ்பா என்ற பெயரில் சிலர் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடப்பதும், அதனை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதேபோல் வேலை தேடி சென்னை வரும் பெண்களை குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் அவ்வப்போது நடக்கிறது.

சில பெண்களிடம் மசாஜ் என்ற பெயரில் ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபட வைத்து சம்பாதிக்கிறார்கள் புரோக்கர்கள்.. இப்படி ஸ்பா நடத்தி வருவதாகக் கூறி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தவர்களை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
இதேபோல் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து குடும்ப தொழில் போல் விபச்சாரத்தை செய்வதும், அதனை போலீசார் கண்டுபிடித்து கைது செய்வதும் நடக்கிறது. வேலை வாங்கி தருவதாக இளம் பெண்களை ஏமாற்றி விபச்சார தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் புரோக்கர்கள் மீது என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், புதிது புதிதாக வந்த வண்ணம் இருக்கிறார்கள் புரோக்கர்கள்.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம் ஆகிய பகுதியில் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வந்ததாகவும், ஸ்பா என்ற பெயரில் மசாஜ் மற்றும் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் சென்னை காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
இதன் அடிப்படையில் சென்னை போலீஸ் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த சோதனையின்போது சென்னை பெருநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைத்தார்கள். மேலும் அண்ணா நகர், கோயம்பேடு உள்பட பல்வேறு பகுதி ஸ்பா உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications