மணிப்பூர் சம்பவம்.. உளவுத்துறை ‘அலெர்ட்’.. சென்னை மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு.. பரபரப்பு!
சென்னை: மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருவதால், சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூட இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற வண்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

மணிப்பூர் மாநில கலவரத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை எதிர் தரப்பினர் சிலர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச அளவிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
மணிப்பூர் கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து வரும் 24ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.இதனிடையே, நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மகளிர் அணி அறிவித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள் போராட்டங்களை அறிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு தடையை மீறி போராட்டம் நடத்திய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மஜக பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி உட்பட 50 பேரை போலீசார் கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருமுருகன் காந்தி, தமிமுன் அன்சாரி உட்பட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாநகர காவல் துறையால் தடைவிதிக்கப்பட்டுள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தியதால், 50 பேர் மீது தடையை மீறி ஒன்றுகூடுதல், மாநகர காவல் சட்டம் 41 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிப்பூரில் விவகாரத்தைக் கண்டித்து, சமூக வலைதளங்களில் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே ஒன்று கூடுவோம் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராடலாம் என்று உளவுத் துறை எச்சரித்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை வழக்கத்தை விட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 4 பேருக்கு மேல் மெரினா கடற்கரைக்கு வரும் நபர்களை போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகே அனுமதிக்கின்றனர்.
சந்தேகப்படும் நபர்கள் மற்றும் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலை வழியாக யாரேனும் போராட்டக்காரர்கள் கடற்கரை பகுதியில் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் போலீசார் மணல் பரப்பில் ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரை பகுதியில் பேரணி, போராட்டங்கள், மனித சங்கிலி உள்ளிட்டவை நடத்த சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications