கருத்து சுதந்திரம் சரி.. அதுக்காக இவ்ளோ கேவலமாகவா?.. இனியாவது ட்விட்டர் சுத்தமாகுமா?
சென்னை: டிவிட்டர் பயன்படுத்துவோர் அதில் பதிவிடப்படும் அநாகரிகமான கருத்துகளால் வெளியேறி வரும் நிலையில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறாக பேசுவோர் நாகரீகமாக கருத்துகளை பதிவிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்டவைகளுக்கென தனித்தனி ரசிகர்கள் பட்டாளங்கள் உண்டு. இவர்கள் எப்போதும் தான் விரும்பும் பிரமுகரை ஆஹா ஓஹோ என பாராட்டி வருவர்.
ஆனால் மற்றவர்கள் விரும்பும் தலைவர்களை மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். தற்போது நவீன காலத்தில் சோஷியல் மீடியா எனும் சமூகவலைதளங்களை பயன்படுத்துவோர் அதிகரித்து விட்டனர்.

அரசியல்
ட்விட்டர் எனும் சமூகவலைதளங்களில் அரசியல், சினிமா, விளையாட்டு, ஊடகம் என அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர். இதில் அரசியல் என வைத்துக் கொண்டால் ஒரு கட்சியின் தலைவர் குறித்து இன்னொரு கட்சியின் தொண்டர் மிகவும் கேவலமாக விமர்சிக்கிறார்கள்.

டிவிட்டர்
அதிலும் ஒருமையில் பேசுவது என்பது போய் டிவிட்டரை திறந்தாலே நாராசம் என்ற அளவுக்கு இவர்களின் பேச்சு உள்ளது. அது போல் ஒரு சினிமா பிரபலம் என எடுத்துக் கொண்டால் ஒரு நடிகர், நடிகையின் ரசிகர், இன்னொரு நடிகர், நடிகையை கண்டபடி பேசுகிறார்கள்.

ஒற்றுமை
ஆனால் இவர்கள் சண்டையிட்டு கொள்ளும் நடிகர், நடிகைகள் ஒற்றுமையாகவே உள்ளனர். சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள். எனினும் கேட்பதில்லை. விமர்சனங்களையே முன்வைத்தாலும் அதை மரியாதையுடன் நாகரீகத்துடனேயே அரசியல்வாதிகள் வைக்கிறார்கள். ஆனால் இந்த தொண்டர்கள் மட்டும் ஏனோ இப்படி அவதூறு கருத்துகளை பதிவிடுகிறார்கள்!

இழிவு
கருத்து சுதந்திரம் இருக்க வேண்டியதுதான். ஆனால் அவை ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். நமது கருத்து யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. மறைந்த தலைவர்களையும் விடாமல் இழிவாக சித்தரித்தும் பேசியும் வருகிறார்கள்.

மரியாதையே இல்லை
இதுபோல் மரியாதை இல்லாமல் பேசும் தொண்டரை சொந்த கட்சியும் கண்டிப்பதில்லை. இது போன்ற செயல்களால் டிவிட்டரை விட்டு பலர் வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துக்களைப் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுத்தமாக்க
எனவே மீண்டும் டிவிட்டர் தளத்தை சுத்தமாக்க தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கை உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீங்கள் விமர்சிக்கும் தலைவர் மற்றொரு தொண்டனுக்கு தலைவர் என்பதை மறந்து இது போல் கேவலமாக பேசும் போக்கு மாறி டிவிட்டர் சுத்தமாகுமா? கருத்துக்களைப் பதிவிடுவோரும் நாகரீக பாதைக்குத் திரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications