ஆரியம்-திராவிடம் பற்றி தெரியாதா அண்ணா "திராவிட" முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு?
சென்னை: ஆரியம்- திராவிடம் குறித்த சர்ச்சைக்கு திராவிட கட்சிகளில் ஒன்றான அண்ணா திமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதில், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அண்ணாயிசம், எம்ஜிஆரிசம், அம்மாயிசம், சின்னம்மாயிசம் வளர்த்துவிட்டதை காட்டுகிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது செய்தியாளர் ஒருவர் மெனக்கெட்டு ஆளுநரின் ஆரியம்- திராவிடம் பொய் என்கிற பேச்சு குறித்து ஒரு கேள்வியைக் கேட்கிறார். இதற்கு திராவிட கட்சிகளில் ஒன்றான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த 'அறிவார்ந்த' பதில்: அதற்கு எவ்வளவு எல்லாம் புராணம் படிக்கோனும்.. நான் அந்த அளவுக்கு படிச்சவன் இல்லை.. ஏன்னா இந்த கதையெல்லாம் படிச்சு சொல்லோனும்னா.. இதையெல்லாம் பெரிய ஆய்வு பண்ணனும்.. ஆய்வு பண்ணினாதான் உண்மையா? பொய்யான்னு தெரியும்.. நான் அதுக்கு உட்பட்டவன் அல்ல.. ஆளுநரிடம்தான் நீங்க கேள்வி கேட்கனும்..அவரை கேட்க வேண்டிய கேள்வியை என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்?

ஆய்வு செய்யனுமாம்: ஆரியமா இல்லையா? என்பதை அறிஞர்கள் பார்த்துதான் கேட்கனும்.. இது உண்மையா? பொய்யான்னு கேட்பதற்கு ஆய்வு செஞ்சாதான் தெரியும். நான் ஆய்வு செய்யாம நீங்க கேட்கிற கேள்விக்கு தவறான பதில் நான் கொடுத்துவிட கூடாது. அதாங்க நான் சொல்றேனே.. இவை எல்லாம் ஆய்வு செய்யப்பட வேண்டும். இது தேவையில்லாத கேள்வி. யாரை கேட்கனுமோ அவிகளை கேளுங்க.. அப்பதான் உரிய பதில் உங்களுக்கு கிடைக்கும்.. இதுதான் சோ கால்ட் திராவிட கட்சியின் 'ஆளுமை மிக்க' தலைவர் எடப்பாடியார் கொடுத்த பதில்.
திராவிடர் இயக்கத்துக்கு சங்கடம்: எடப்பாடி பழனிசாமியின் இந்த பதிலானது திராவிடர் இயக்கத்தினரை வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது. அறிவியக்கம் அறிவியக்கம் என்று சொல்லி வளர்ந்த திராவிடர் இயக்கம், இப்படியான 'பேட்டியாளர்களை' ஒரு கட்சிக்கே தலைவராக உருவாக்கி வைத்திருப்பது என்பது திராவிடர் பேரியக்கத்துக்கு ஆகப் பெரும் அவமானமும் பெருங்கேடும்தான் என்கின்றனர் 'ஆய்வாளர்கள்'.
கட்சியில் இருக்கும் திராவிடம்: தமது கட்சியின் பெயரில் உள்ள 'திராவிடம்' என்றால் என்னவென்று தெரியாத ஒருவர்தான் அந்த கட்சிக்கே பொதுச்செயலாளர்.. 'கட்சிப் பெயரில் உள்ள திராவிடம் எதற்காக சூட்டப்பட்டது என்பதே தெரியாமல் ஒருவர் அந்த கட்சிக்கே பொதுச்செயலாளர் ஆக முடியும் என்றால் எது சூழ் உலகாக தமிழ்நாடு அரசியல் உருமாறிப் போய் உருக்குலைந்து கிடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். இதை காலத்தின் கோலம் என்பதா? கொடுமை என குமுறி முட்டிக் கொள்வதா? எனவும் தெரியவில்லை என வேதனைப்படுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அண்ணாயிசம்: அதே நேரத்தில் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். அண்ணா திமுகவை உருவாக்கிய எம்ஜிஆரிடம் உங்கள் கொள்கை என்ன எனக் கேட்டபோது 'அண்ணாயிசம்' என்றார். அதையாவது ஓரளவு சமாளித்து செரிமானித்துக் கொள்ள முடியும். அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையே அண்ணாயிச கோட்பாட்டாளர் எம்ஜிஆர், அனைத்திந்திய அண்ணா திமுக என பெயரை மாற்றிய அஜீரணத்தைதான் இன்று அவரது வழிவந்த எடப்பாடி பழனிசாமி தமது பேட்டியிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அம்மாயிசம்: எம்ஜிஆருக்காவது சொல்வதற்கு அண்ணாயிசம் இருந்தது.. எடப்பாடி பழனிசாமிக்கோ, திராவிட கட்சிக்கு தலைமை வகித்த ஜெயலலிதாவின் 'அம்மாயிசமும்' அவரது தோழியாக இருந்த சசிகலாவின் 'சின்னம்மாயிசமும்தானே தெரியும்.. அம்மாயிசத்தின் ஆத்மார்த்த சீடராக- சின்னம்மாயிச உதவியால் முதல்வருமான 'அம்மாயிஸ்டுகளிடம்' ஆரிய திராவிடம் பற்றியோ அண்ணாயிசம் பற்றியோ கேட்டால் இப்படியான பதில்தானே வெளிப்படும். வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications