அரசியல் விழிப்புணர்வு முக்கியம்.. திரைத்துறைக்கு வர உள்ளவர்களுக்கு திருமாவளவன் அறிவுரை!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் திரை பண்பாடு ஆய்வகம் சார்பாக நடத்தப்பட்ட சிறப்பு ஒரு நாள் கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.
அண்மைக் கால தமிழ் சினிமாவின் மிகமுக்கிய இயக்குநர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். சமூகம் சார்ந்த அரசியல் கதைக்களத்தை படமாக்குவதில் கில்லாடியான இவர், தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சினிமாவைக் கடந்து பல்வேறு தளத்திலும் வெற்றிமாறன் பணியாற்றி வருகிறார். சில வருடங்களாக விவசாயத்தில் ஆர்வம் காட்டி வரும் வெற்றிமாறன், சமூகம் சார்ந்த பிரச்னைகள் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார்.

அதேபோல் திரைத்துறையில் புதிதாக கால்தடம் பதிக்க விரும்பும் முதல் தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் சென்னை வேளச்சேரியில் இயக்குநர் வெற்றிமாறன் நடத்தி வரும் திரை பண்பாடு ஆய்வகம் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில், புதிதாக திரைத்துறைக்கு வர உள்ளவர்கள் அரசியல், பண்பாட்டு, சமூகம் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை கற்று இருக்க வேண்டும். ஒரு மனிதனை சிந்திக்க வைப்பதும் செயல்பட வைப்பதும் ஒரு கோட்பாடு மட்டுமே.
அது அரசியல் கோட்பாடாக இருக்கலாம். பண்பாடு ரீதியிலாக கோட்பாடாக இருக்கலாம். ஏன், கடவுள் நம்பிக்கையாக கூட இருக்கலாம். ஆனால் கட்டாயம் மதம் கிடையாது. இந்தியாவில் மதம் சார்ந்த தேசியத்தை முன்வைத்து கோட்பாட்டை வழிநடத்துகிறார்கள்.
மதம் சார்ந்த தேசியத்தை கட்டமைக்க இங்கு கோட்பாடு வைத்துள்ளார்கள். ஒரே தேசமாக இருக்க வேண்டுமென்றால் ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில் திரை பண்பாடு ஆய்வகத்தின் நிறுவன தலைவர் இயக்குநர் வெற்றிமாறன், முனைவர் ராஜநாயகம், செயலாளர் வெற்றி துரைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications