அரசியல் கிளைமேட் சட்டுனு மாறுது.. கதவை மூடிய அதிமுக.. விசிகவின் திடீர் முடிவு.. விஜய்க்கு நெருக்கடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தவெக ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் தேவை. இந்நிலையில், அதிமுக தமது கதவுகளை மூடியுள்ளது. இதையடுத்து விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பேர வலிமையை அதிகரிக்க, தவெகவுக்கு ஆதரவை உடனடியாகத் தெரிவிக்காமல் காலம்தாழ்த்துவதாகத் தெரிகிறது. தவெகவுக்கு ஆதரவு கிடைப்பது தாமதமாவதால் அரசியல் கிளைமேட் திடீரென மாறியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கும், எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவுக்கும் ஷாக் கொடுத்து தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்கு மேலும் 11 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

VCK

தவெகவுக்கு 11 சீட் தேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், தேமுதிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தற்போதைய சூழலில் அறிவித்துள்ளன. தலா 2 எம்.பிக்களை வைத்துள்ள விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விஜய்யை ஆதரிக்க மாட்டோம் என இப்போது வரை வெளிப்படையாக சொல்லவில்லை.

தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க உள்ளதாக இன்று காலை முதல் செய்திகள் வெளியாகின. இது குறித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக கதவை மூடியது

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி, "பல ஊடகங்களில் தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அது முற்றிலும் தவறான செய்தி.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக செயல்பட்டு வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

விசிக கூட்டம் ரத்து

இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க ஆதரவளிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக, நாளை நடைபெறவிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஏற்கனவே, 5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ தலா 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 6 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர்.

இவர்கள் ஆதரவு அளித்தாலே, ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைத்துவிடும் என்னும் சூழலில், இந்த 3 கட்சிகளிடமும் ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்தச் சூழலில் தான் விசிக இதுதொடர்பாக முடிவெடுப்பதை தள்ளிப்போட்டுள்ளது.

கையை மூடிய விசிக

அதிமுகவும் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கவும் தயாராக இல்லை. இதனால், தவெகவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் சேர்த்து தற்போது 112 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில், இன்னும் 6 பேரை சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இந்நிலையில், விசிகவின் முடிவு தவெகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒவ்வொரு எம்.எல்.ஏக்களின் ஆதரவும் விஜய்க்கு மிக முக்கியம் என்பதால், பேர வலிமையைக் கூட்டுவதற்காக விசிக, இப்போது மீட்டிங்கை தள்ளிப்போட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதிமுக ஆதரவு தராததால், விஜய்க்கு வேறு வழியில்லை, நம்மிடம் தான் வரவேண்டும் என்பதால், விசிக, அமைச்சரவையில் இடம் உள்ளிட்ட பல்வேறு டிமாண்ட்களை வைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கிளைமேட் மாறுது

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை, அமைச்சரவையில் இடம் கேட்காவிட்டாலும், கொள்கை அடிப்படையில் சில செயல் திட்டங்களை நிபந்தனைகளாக வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவுக்கு இன்னும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு எந்த வகையில் கிடைக்கும் என்பது அரசியல் களத்தில் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+