கொரோனா தடுப்பூசி பணிகளில் அரசியல் தலையீடு.. உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.. ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை: கொரோனா தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் தடுப்பூசி பணிகளும் வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பணிகளில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஓபிஎஸ் அறிக்கை
இது குறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியும் சர்க்காரும் தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக்கூடாது. இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தன்மையுடன் தனித்தனியாக இருக்க வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா. அவரது பொன்மொழிக்கு முற்றிலும் முரணான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தத்திற்குரியது.

தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி முகாமில், தடுப்பூசியின் இருப்பைக் கணக்கில் கொண்டு, கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடிய தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்துக் கடந்த மே 22ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குட்பட்ட லக்காபுரத்தில் மே 27 அன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடப்பதாக முன்களப் பணியாளர்களுக்குத் தகவல் அறிவிக்கப்பட்டது.

திமுகவினர் தலையீடு
இதையடுத்து, அவர்கள் தடுப்பூசி முகாமிற்குச் சென்றதாகவும். ஆனால் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், பக்கவாட்டு வழியாக திமுக பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், முகாமிற்கு வெளியே நின்றிருந்த முன்களப் பணியாளர்கள் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டதன் காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரிக்கும்
இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுவதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் முன்களப் பணியாளர்களை அலைக்கழிப்பதுடன், கொரோனா பரவலை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. இது முதலமைச்சரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிப்பது போல் உள்ளது.

உடனடி நடவடிக்கை
எனவே முன்னர் வெளியிடப்பட்ட அரசாணைக்கு இணங்க ஒவ்வொரு பகுதியில் உள்ள முன்னுரிமை பெற்றவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, காவல் துறையினரின் உதவியுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதுபோன்ற முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications