கட்சிகளின் வயிற்றில் பகீரென புளியை கரைக்கும் கொரோனா அதிகரிப்பு- லாக்டவுன் அமலானால் தேர்தல் கதி?
சென்னை: தமிழகத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் லாக்டவுனை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இதனால் தேர்தல் எப்படி நடக்குமோ? என அரசியல் கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்பதால் பிரசாரம் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு
இந்த நிலையில் மார்ச் 1-ந் தேதி முதல் நாடு முழுவதுமே கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது.

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
இதனால் கொரோனாவை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் லாக்டவுனை மீண்டும் அமல்படுத்தலாமா? என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

லாக்டவுனும் தேர்தலும்
அப்படி லாக்டவுன் மீண்டும் அமல்படுத்தப்பட்டால் தேர்தல் எப்படி நடைபெறும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது? ஏற்கனவே வீடு வீடாக 5 பேர்தான் பிரசாரம் செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறித்தான் கூட்டம் கூட்டமாக பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.

பிரசாரம் இல்லாத தேர்தல்?
லாக்டவுன் கட்டுப்பாடுகள் தீவிரமானால் பிரசாரம் என்பது முழுமையாக நிறுத்தப்படும் சூழ்நிலை உருவாகும். வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 6-ந் தேதி மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலை ஏற்படும். இதனால் என்ன செய்வது? என்பது தெரியாமல் அரசியல் கட்சிகள் விழிபிதுங்கி உறக்கத்தை தொலைத்து கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications