என்ன இது.. யாரைப் பார்த்தாலும் ஒரே ஒப்பாரியா இருக்கு.. குழம்பும் வாக்காளர்கள்!
சென்னை : தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை பார்க்காத பல நிகழ்வுகள் இந்த தேர்தலில் நடந்து வருகிறது. இவை எதற்கும் காரணம் புரியாமல் மக்கள் தான் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வழக்கமாக திமுக, அதிமுக கட்சிகள் மட்டும் தான் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை சந்திக்கும். மற்றவர்கள் மூன்றாவது அணி அமைத்தாலும் தேர்தலுக்கு பிறகு முதல்வரை முடிவு செய்வோம் என கூறிவிடுவார்கள்.
ஆனால் இந்த முறை எல்லாம் மாறி விட்டது. யாரைப் பார்த்தாலும் ஒரே அழுகையாக இருக்கிறது. வழக்கமாக பெண்கள் அழுவார்கள் என்று பார்த்தால் இந்த முறை ஆண்கள்தான் மூக்கைச் சிந்திக் கொண்டுள்ளனர்.

5 முதல்வர் வேட்பாளர்கள்
எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், கமல், டிடிவி தினகரன், சீமான் என 5 பேர் முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். இவர்களில் திமுக தவிர மற்றவர்கள் ஆட்சியை பிடிப்பதை விட, மீண்டும் திமுக.,வை ஆட்சிக்கு வர விட கூடாது என்ற நோக்கத்துடனேயே களமிறங்கி உள்ளனர்.

ஏமாற்றத்தில் மாஜிக்கள்
சீமானின் நாம் தமிழர் தவிர மற்ற அனைவரும் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கிறார்கள். புதிதாக பல கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதாலும், கூட்டணிகளுக்கு அதிக சீட் ஒதுக்க வேண்டியுள்ளதாலும் முக்கிய கட்சிகளில் மாஜிக்கள், சீட் கிடைக்கும் என அதிக நம்பிக்கையுடன் காத்திருந்தவர்கள் என பலருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை.

கட்சிகளில் புதிய காட்சிகள்
இதனால் சீட் கிடைக்காதவர்கள் கதறி அழும் காட்சிகள் தினமும் அனைத்து கட்சிகளிலும் நடக்கிறது. தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் ஆண், பெண் என்ற பேதமின்றி பலரும் சீட் கிடைக்காததால் கதறி அழுது, புலம்பி வருகின்றனர். இவற்றை பார்க்க ஒரு புறம் காமெடியாக இருந்தாலும், மற்றொரு புறம் பரிதாபமாக உள்ளது.

பொங்கி எழுந்த முக்கியஸ்தர்கள்
இன்னும் சிலர் சீட் கிடைக்காத விரக்தியில் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இருந்துள்ளனர். அப்படி இணைந்த சிலருக்கு புதிய கட்சியில் சீட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் அரசியலை விட்டே விலகுவதாக ஆவேசமாக பேட்டி கொடுத்துள்ளனர். இன்னும் சிலர் தாங்கள் விருப்ப மனு அளித்து கிடைக்காமல் போன அதே தொகுதியில், தனது சொந்த கட்சி வேட்பாளரையே எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

எதுக்குய்யா இந்த அழுகாச்சி
இது தான் கடைசி தேர்தல், இதற்கு பிறகு தேர்தலே நடக்காது, சீட்டே கிடைக்காது என்பது போல் எதற்காக இவர்கள் இப்படி அழுகிறார்கள் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. தேர்தல் என்றால் அனைவரும் விருப்ப மனு அளிப்பதும், இவர்களில் சிலருக்கு சீட் கொடுப்பதும், பலர் ஏமாந்து போதும் கட்சி தலைமையின் முடிவை பொறுத்தது என அனைவரும் அறிந்ததே. பல வருடம் அரசியலில் இருந்து அனுபவம் மிக்கவர்களும் இப்படி அழுவது ஏன் என காரணம் புரியாமல் மக்கள் தான் குழம்பிப் போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications