எடப்பாடிக்கு எகிறுதே டென்ஷன்..ஓரம் கட்டப்படும் ஓபிஎஸ்! இரட்டை இ(த)லையை மிரட்டும் பாஜக? பரபர அரசியல்!
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி உறவினர்களின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை என மத்திய விசாரணை அமைப்புகள் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் ஒரே நேரத்தில் டார்கெட் செய்வது இருதரப்பையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பயமுறுத்துகிறதா பாஜக என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவுடன் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என அறிவித்து கடைசி வரை அந்த கொள்கையில் உறுதியாக இருந்தவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக கிட்டத்தட்ட பாஜக கட்டுப்பாட்டில் வந்தது என்று கூட கூறலாம்.

ஜெயலலிதா இருந்தவரை பிரதமராக இருந்த நரேந்திர மோடி அவரது வீட்டுக்குச் சென்று சந்திப்பது வழக்கம். ஆனால் மத்திய அமைச்சர்கள் வந்தால் கூட அதிமுகவினர் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பல அணிகளாக உடைந்தது. சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் என அடுத்தடுத்து பலர் வெளியேற்றப்பட்டனர். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கிய நிலையில், சசிகலாவோ தான் அதிமுக பொதுச் செயலாளர் என தற்போது வரை கூறி வருகிறார். முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டு பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் சேர்ந்து துணை முதலமைச்சர் ஆனார். கட்சியிலும் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.
ஆனால் அதற்குப் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் பாஜக கூட்டணி அமைத்ததும் அதிமுகவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. சட்டமன்ற தேர்தல் வரை எதிர்ப்பார்த்த வெற்றி அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. இதை அடுத்து ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கிய நிலையில் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். அவரும் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்.
இதற்கு இடையே சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுகவினர் தெளிவாக கூறிவிட்டனர். எடப்பாடி பழனிசாமியும் அதனை உறுதி செய்திருக்கிறார். ஆனால் சில நிர்வாகிகள் பாஜக கூட்டணி வேண்டும் என சொல்வதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த முறை நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது என கடுமையாக உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் மத்திய பாஜக தலைமை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்புகிறது. இதற்காக பல வழிகளில் முயன்றும் நடக்காத நிலையில் மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி உறவினர்களுக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் பணம் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறும். பிறகு அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதுமாக தொடர்ந்தது. இந்த நிலையில் சென்னையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கட்டிட ஒப்புதல் வழங்குதல் தொடர்பாக லஞ்சம் பெற்றதாக தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான சுமார் 100 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டன. தொடர்ந்து பாஜக ஆதரவாளராகவே ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் நிலையில் அவரது நெருங்கிய ஆதரவாளரான வைத்திலிங்கத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது ஓபிஎஸ்ஐ அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது கூடவே இருக்கும் நிர்வாகிகளை கூட காப்பாற்ற முடியாத ஓபிஎஸ் அதிமுகவை எப்படி காப்பாற்றுவார் என எடப்பாடி தரப்பு கேட்டது.
அதே நேரத்தில் பழனிச்சாமிக்கு நெருக்கமான உறவினர்கள் இல்லங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதை ஓபிஎஸ் தரப்பு விமர்சித்தது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு தரப்பையுமே பாஜக மிரட்டுவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என நினைக்கும் பாஜக, சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கவும் விரும்புகிறது. அதற்காக இருதரப்பையும் எச்சரிக்கை செய்யும் விதமாகவே இந்த சோதனை மற்றும் நடவடிக்கை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications