இதான் ஸ்டாலின்.. தவெக விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய திமுக.. யாருமே இதை எதிர்பார்த்திருக்க மாட்டாங்களே
சென்னை: தவெகவிற்கு திமுக ஆதரவு தர தொடங்கி உள்ளது.. என்னங்க சொல்றீங்க.. தவெகவிற்கு திமுக ஆதரவா? என்று கேட்கிறீர்களா? ஆம்.. ஏன் ஆதரவு தருகிறார்கள் என்று இங்கே பார்க்கலாம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு முறையற்ற ஆட்டத்தை கையில் எடுப்பதாகக் கருதி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) திமுக தற்போது ஆதரவுக் குரல் கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பெரும் கட்சிக்கே முதல் வாய்ப்பு: திமுக முழக்கம்
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் குறித்துப் பேசுவது அப்புறம் இருக்கட்டும், முதலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகள் எதற்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சட்டப்படியான மரபுகளின்படி ஆளுநர் தனிப்பெரும் கட்சியையே முதலில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அதன்பின்பே பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும்.. பெரிய கட்சியே முதலில் அழைக்கப்பட வேண்டும்.. இதுதான் ஜனநாயகப் பண்பு," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் பெரும்பான்மை இல்லை எனில், ஆளுநர் தனிப்பெரும் கட்சியான தவெக-வை அணுக வேண்டும். அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் இருந்தால் மட்டுமே, மற்ற கட்சிகள் அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் குறித்துப் பரிசீலிக்கப்பட வேண்டும். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் என்பது கடைசியக்காத்தான் வரும்," என்று விளக்கமளித்தார்.
மத்திய அரசின் தலையீடும் திமுகவின் நிலைப்பாடும்
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், எந்தவொரு முன் தேர்தல் கூட்டணியும் தெளிவான பெரும்பான்மையைப் பெறவில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி மத்திய அரசு சில 'சதித் திட்டங்களை' அரங்கேற்ற வாய்ப்புள்ளதாக திமுக சந்தேகிக்கிறது. இதன் காரணமாகவே, ஒரு புதிய கட்சியாக இருந்தாலும், மக்களின் ஆதரவைப் பெற்ற தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய்யின் தவெக-விற்கு திமுக தனது தார்மீக ஆதரவை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
"தமிழகத்தில் தற்போது எந்த முன்னணிகளுக்கும் பெரும்பான்மை இல்லை. வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியான விஜய் தலைமையிலான தவெக, ஏற்கனவே ஆளுநரைச் சந்தித்து 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது," என சரவணன் அண்ணாதுரை சுட்டிக்காட்டினார்.
ஆளுநரைச் சந்தித்த விஜய்
இதற்கிடையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு (லோக்பவன்) வருகை தந்து தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் இரண்டாவது முறையாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தனது கட்சிக்கு இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதங்களை அவர் சமர்ப்பித்ததாகத் தெரிகிறது.
விஜய்யின் இந்த அரசியல் நகர்வு மற்றும் அதற்கு திமுக அளித்துள்ள இந்த சப்போர்ட், தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பரம எதிரிகளாகப் பார்க்கப்பட்ட திராவிடக் கட்சியும், புதிய வரவான தவெக-வும் ஆளுநர் ஒரே நேர்க்கோட்டில் சிந்திப்பது பாஜகவை அதிர வைத்துள்ளது.
அரசியல் நோக்கர்களின் பார்வை
திமுகவின் இந்த நிலைப்பாட்டை அரசியல் ஆய்வாளர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். "இது வெறும் ஜனநாயக மரபைக் காப்பதற்கான குரல் மட்டுமல்ல, மத்தியில் ஆளும் பாஜகவின் செல்வாக்கை தமிழகத்தில் தடுத்து நிறுத்த திமுக மேற்கொள்ளும் ஒரு ராஜதந்திர நகர்வாகவும் இதைப் பார்க்கலாம்," என அவர்கள் கருதுகின்றனர்.
எது எப்படியோ, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்குமா? அல்லது ஆளுநரின் முடிவு வேறு விதமாக இருக்குமா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் கிண்டி ஆளுநர் மாளிகையை நோக்கியே உள்ளது.












Click it and Unblock the Notifications