சீட்டுக்காக.. அடித்து கொள்ளும் கட்சிகள்.. ஆக.. மக்களெல்லாம் இவர்களுக்கு ஒரு மேட்டரே இல்லை போல!
அரசியல் தலைவர்கள் மக்களை பற்றி கவலைப்படாமல் சரமாரி வசைபாடி வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: ஆக மொத்தம் இந்த கட்சி தலைவர்களுக்கு மக்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது நிரூபணமாகி வருகிறது.
கடந்த காலங்களில் திராவிட இயக்க தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு பல இருந்தாலும் பரஸ்பர மரியாதையும் நட்புணர்வும் நீடித்தே வந்திருக்கிறது. இதனால் தமிழக அரசியல் ஒரு கண்ணிய பாதையிலேயே பயணித்து வந்தது என்றே சொல்லலாம்.
ஏராளமான கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் தந்தை பெரியாரும் மூதறிஞர் ராஜாஜியும் பரஸ்பர நட்புறவு கொண்டிருந்தனர், ஒருவரையொருவர் மரியாதை கொடுத்தனர். கர்மவீரர் காமராஜரும் அறிஞர் அண்ணாவும் சிறந்த முதல்வராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியதுடன் பல விஷயங்களில் இருவரும் இணைந்து செயல்பட்டனர்.
அதேபோல மக்கள் திலகம் எம்ஜிஆர் - திமுக தலைவர் கருணாநிதி இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்து பணியாற்றினாலும் அவர்களுக்குள்ளேயான நட்பும் மரியாதையும் இறுதி வரை குறையவில்லை. முந்தைய காலத்தினைபோல் இல்லையென்றாலும், கருணாநிதியும், செல்வி ஜெயலலிதாவும், கண்ணியத்தையும் வார்த்தை வரம்புகளையும் இறுதிவரை கடைபிடித்தனர்.

விஜயகாந்த்
ஆனால் இப்போது நடந்து வரும் கூத்தையெல்லாம் பார்த்தால் என்ன நினைப்பது? அரசியல் நாகரீகம் என்பது கொஞ்சமும் இல்லாமல் போய்விட்டதே என்று கவலையாக இருக்கிறது. ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதும் சகஜம்தான். அப்படித்தான் தேமுதிக திமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்படித்தான் அன்றைக்கு ஸ்டாலினும் விஜயகாந்த் வீட்டுக்கு போனார். பிறகு திடீரென என்ன ஆயிற்று? இந்த விஷயம் ஏன் இப்படி நாறி கொண்டிருக்கிறது?

தவறுகள்
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே அதுவும் உடன்படிக்கை கையெழுத்தாகும் சமயத்தில் திமுகவுடன் பேச்சு நடத்தியதில் முதல் தவறு தேமுகதிவுடையது. அப்படி பேச்சுவார்த்தை நடந்ததை வெளிஉலகுக்கு அம்பலப்படுத்தியது திமுக, இது இரண்டாவது தவறு. தங்களுக்கு சீட் இல்லாமல் செய்ததற்காக ஒரே நாளில் ஒரு கட்சியை தூக்கி எறிந்து சுதீஷ் பேசுவது மூன்றாவது தவறு.

எடக்கு மடக்கு பேச்சு
சுதீஷ் இப்போது பேசிய பேச்சில் எதற்காக அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லிக் கொண்டே திமுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என்று இதுவரை வெளிப்படையாக சொன்னாரா? ஒரு பெரிய கட்சியையும், அதன் தலைவரையும் வயது, அனுபவம் வித்தியாசம் பாராமல் இப்படி தாறுமாறாக பேசுவது சுதீஷூக்கு அழகா? இப்படி எடக்கு மடக்காக பேசும் ஒருவரை விஜயகாந்த் எப்படி பேச்சுவார்த்தையில் அனுமதித்து இருக்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது.

ஏன் சொல்ல வேண்டும்?
அப்படியே தேமுதிக பேச்சுவார்த்தைக்கு வந்தால், சீட் உண்டு, இல்லை என்று துரைமுருகன் சொல்லி இருக்கலாம். அதைவிட்டு விட்டு எதற்காக வெளியில் விஷயத்தை போட்டு உடைக்க வேண்டும். விஜயகாந்த் வீட்டுக்கு ஸ்டாலின் சென்றபோதுகூட, பேச்சுவார்த்தை விஷயத்தை வெளியில் சொல்லாமல், உடல்நலன் காரணத்தை சொல்லி விட்டுதானே சென்றார்?

தவிர்த்திருக்கலாம்
துரைமுருகன் விஷயத்தை வெளியில் அம்பலப்படுத்தியதால் திமுகவுக்கு என்ன இப்போது கிடைத்துவிட்டது? இதை சொல்லாமல்கூட தவிர்த்திருக்கலாமே? ஒரு மூத்த தலைவர், ஸ்டாலினையே வழிநடத்தி செல்லக்கூடும் அளவுக்கு திறமையும் அனுபவமும் வாய்ந்த துரைமுருகன் இப்படி செய்யலாமா? என்பதுதான் கேள்வியாக எழுகிறது.

என்ன நினைப்பார்கள்?
இப்படி இருதரப்புமே ராஜதந்திரம் என்று நினைத்து வரம்பு மீறி நடந்து வருவதை தமிழக மக்கள் கவனித்துதான் வருகிறார்கள். ஆளுக்கு ஒரு பக்கம் ஒருத்தரை மாற்றி ஒருத்தர் தூற்றி கொண்டிருந்தால் மக்கள் என்ன நினைப்பார்கள், தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இது தங்களது கட்சிகளுக்கே பாதகமாக வந்து சேராதா? அரசியல் முதிர்ச்சி எதுவுமே இல்லாமல், அரசியல் நாகரீகமும் இல்லாமல் சேற்றை வாரி பூசுவது ஒன்றும் அவர்கள் மேல் கிடையாது, அது இன்னும் இவர்களை நம்பிக் கொண்டிருக்கும் மக்கள்மேல்தான்!












Click it and Unblock the Notifications