அதிமுக 'ஷிண்டே'க்கள் அவ்ளோ குரூரமா? எடப்பாடி பக்கத்தில உட்கார்ந்தே குழிபறிப்பது, ரசிப்பது எல்லாம்?
சென்னை: அரசியலில் ஜெயிப்பதைத் தவிர இலக்கு எதுவும் இருக்க முடியாது என்பது ஒரு நாடறிந்த சாணக்கியர் சொன்ன தத்துவம். அதனைத்தான் இப்போது அதிமுகவின் 'ஏக்நாத் ஷிண்டே'க்கள் கச்சிதமாக செய்து கொண்டிருகின்றனர்.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொள்ள வெளிப்படையாக பல காரணங்கள் பேசப்படுகின்றன. உண்மையில் பாஜக உறவாடி கெடுக்கிற வேலையை தொடங்கிவிட்டது என்கிற அதிமுக தலைமையின் அச்சம் முதன்மை காரணம்; தம்மை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுக்கும் ஒரு கட்சியின் தலைவரை சரிக்கு சமமாக மதிப்பதும் கை குலுக்குவதும் ஜீரணிக்க முடியாது என்பது 2-வது காரணம்.

எடப்பாடியின் பதிலடி வியூகம்: அதிமுக- பாஜக இடையேயான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் போதே 20 தொகுதிகளை விட்டுக் கொடுக்கலாம் என வலிய வந்து ஐடியா சொன்னபோதே அதிமுக தலைமை உஷாராகிவிட்டது. இவர்கள்தான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேக்கள் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்தும் கொண்டது அதிமுக தலைமை.
கோவை சம்பவம்: பாஜகவுடனான கூட்டணி இனி இல்லவே இல்லை என பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியதுதான் தாமதம். பாஜகவும் ஸ்லீப்பர் செல்லான ஏக்நாத் ஷிண்டேக்களை அவ்வளவு சீக்கிரமாக களத்தில் ஆடவிட்டுவிட்டது. இதுதான் கோவையில் நடந்த சம்பவத்தின் பின்னணி.
குரூரமானவர்களா ஷிண்டேக்கள்?: ஆனால் இதில் உச்சகட்டமானது என்னவெனில், ஏக்நாத் ஷிண்டேக்களின் போக்கு ரொம்ப குரூரமானது என்பதுதான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். அதாவது கோவையில் அதிமுகவை உடைக்கும் மனநிலையில் ஒரு சந்திப்பு நடக்கிறது. அந்த சந்திப்புக்கு சூத்திரதாரியான ஷிண்டேவை அனைவரும் அறிவார்கள். ஆனால் அந்த ஷிண்டே செய்த காரியம்தான் அப்படி ஒரு குரூரம் என்கின்றன அந்த வட்டாரங்கள்.
பக்கத்துல உட்கார்ந்து ரசிப்பது: எடப்பாடியை சந்திக்க வேண்டும் என சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குப் போகிறார் சோ கால்ட் ஷிண்டே. எடப்பாடி வீட்டுக்குள் கால் வைத்த நேரத்தில் டிவியில் அதிமுக முக்கிய புள்ளிகள் சிலர் பாஜக முக்கிய தலைவரை சந்தித்த காட்சிகள் ஓடுகின்றன. எடப்பாடி தரப்பு அதிர்ச்சியுடன் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த அதிர்ச்சியை உடன் இருந்து கொண்டே ரசித்துக் கொண்டிருந்தாராம் ஷிண்டேக்களில் ஒருவர். அவர்தான் இத்தனைக்கும் காரணம் என அங்கிருந்த அனைவரும் மனதுக்குள் குமுறினாலும் இன்னமும் பகிரங்கமாக கோபத்தைக் காட்டாமல் இருக்கின்றனராம். ஷிண்டேவும் கூட, கோபத்தைக் காட்டும் வரை சீண்டிக் கொண்டே இருக்கலாம் என ஆட்டத்தை விளையாடுகிறாராம். இதனால் தான் 'ஷிண்டேக்கள்' அவ்வளவு குரூரமானவர்களா? என்கிற கேள்வி எழுகிறது எனலாம்.












Click it and Unblock the Notifications