தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.. எந்தெந்த நேரம்? முக்கியமான கண்டிஷன்!
சென்னை: தீபாவளி பண்டிகை அன்று (அக்டோபர் 31) இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. தீபாவளி அன்று தமிழ்நாட்டு மக்கள் காலை 6 - 7 மணி மற்றும் இரவு 7 - 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். அன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகையின்போது பல ஆயிரம் கோடி அளவிற்கு பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளில் பட்டாசு சத்தம் ஊரையே கிழிக்கும்.

பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசு அதிகளவில் ஏற்படுகிறது. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசு காரணமாக குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அதீத பட்டாசு சத்தம் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக பட்டாசு வெடிப்பதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தியாளர்கள், பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், குறைந்த அளவில் ஒலி மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மருத்துவமனை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய அபாயமுள்ள இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
பட்டாசு வெடிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:
1. அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பும் பட்டசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
2. பட்டாசுகளை கவனமாகவும் விபத்து ஏற்படாமலும் வெடிக்க வேண்டும். பெரியவர்கள் உடன் இருக்கும் போது பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக அருகில் பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
3. குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
4. மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், சரணாலயங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
5. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications