விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை -பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற ரெய்டுக்கு காரணம் பாஜக தான் என்றும், மத்திய அரசுக்கு எதிராக விஜய் கருத்துக்கூறியதால் சோதனை நடத்தப்பட்டதாகவும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் விமர்சித்திருந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

வருமான வரித்துறையினரை பொறுத்தவரை அவர்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனை நடத்துவார்கள் என்றும், அவர்களை சோதனை நடத்துமாறு பாஜக ஒன்றும் அறிவுறுத்தவில்லை எனவும் கூறினார். சம்பந்தமே இல்லாத ஒரு விவகாரத்தில் சிலர் பாஜகவை இணைத்து பேசிவருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார். சிலர் பாஜகவை பற்றி தவறான தகவலை பரப்பும் நோக்கிலும், அவதூறு பரப்பும் வகையிலும் விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு தங்களை காரணமாக கூறி வருவதாக தெரிவித்தார். இந்த தகவல் முற்றிலும் பொய்யானது எனக் கூறினார்.
மேலும், ரஜினியுடன் பாரதிய ஜனதா கூட்டணி வைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை, அவர் முதலில் கட்சி தொடங்கட்டும் அதன் பிறகு அதைப் பற்றி பேசலாம் என்றார். அப்போது செய்தியாளர்கள் அதையொட்டி மீண்டும் கேள்வி எழுப்பிய போது, ரஜினிகாந்தின் கொள்கை, சிந்தனை, உள்ளிட்டவைகளை அறிந்த பின்னர் கூட்டணி அமைப்பது பற்றி தேசிய தலைமை முடிவெடுக்கும் எனக் கூறினார்.
இதனிடையே டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும், அதனை பாஜக சார்பில் தாம் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications