காணும் பொங்கல் கொண்டாட்டம்.. மெரினாவில் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார்
சென்னை: காணும் பொங்கல் கொண்டாட்டத்தையடுத்து மெரினாவில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தை முதல் நாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 17-ஆம் தேதி காணும் பொங்கல் அன்று பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வர்.
சென்னையை பொருத்தவரை மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி பொழுதை கழித்து வருவார்கள். அன்று காலை இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் உணவு பொருட்களை அங்கேயே சமைத்து சாப்பிடுவார்கள்.
மாலையில் வீடு திரும்புவார்கள். மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
மெரினாவில் கடலில் இறங்கி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காகவும் மெரினாவில் இறங்குகிறார்களா என்பதை பார்வையிடவும் கடற்கரையில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
கடற்கரை முழுவதும் 6 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. அங்கிருந்தபடி பைனாகுலர் மூலம் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். கடலில் இறங்குபவர்களை கட்டுப்படுத்த குதிரை படை வீரர்களும் இப்போதே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு வசதியாக குழந்தைகளின் கைகளில் பெற்றோர் மற்றும் போலீஸ் அதிகாரியின் செல்போன் எண்கள் இடம்பெறும் வளையமும் கட்டப்படுகிறது.
மெரினா தவிர்த்து வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.