பொங்கல் பரிசு டோக்கன் ரெடி.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. அரசு வழங்கிய மேஜர் அறிவுறுத்தல்!
சென்னை: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்காக 248 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. கரும்பு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பொங்கல் பரிசு விநியோகம் குறித்த வழிமுறைகளை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 2022-ம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்பட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பும், கரும்பும் வழங்கப்பட்டது. கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா 1000 ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பணம் கிடைக்கும் எதிர்பார்த்து காத்திருத்த மக்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் சேர்த்து கடந்த ரூ.3 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் ரொக்கப் பணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் உள்ள 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 244 மொத்த ரேஷன் அட்டைதாரர்களில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு தகுதி உள்ளவர்களாக 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரேஷன் அட்டைதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக வழங்குவதற்காக 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டியும், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலையும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்காக 248 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் வழங்குதல், டோக்கன்கள் வழங்குவது குறித்து அறிவுரைகளை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
எக்காரணத்தைக் கொண்டும் நியாய விலைக் கடையைச் சாராத வெளிநபர்களோ அல்லது அரசியல் கட்சி சார்ந்த நபர்களோ பொங்கல் பரிசு டோக்கன்களை விநியோகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு டோக்கன்களை அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மட்டுமே நேரடியாகக் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், ஜனவரி 2 ஆம் தேதிக்குள் டோக்கன்களை அச்சிட்டு விநியோகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க சுழற்சி முறையில் (Staggering System) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும், பிற்பகல் 100 பேருக்கும் விநியோகம் செய்யப்படும். இரண்டாம் நாளில் இ டவசதியைப் பொறுத்து முற்பகல் 150 முதல் 200 பேர் வரை டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட கடைகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசல் அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளின் பட்டியலை முன்கூட்டியே தயாரித்து, காவல்துறை பாதுகாப்பு கோரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுப் பொருட்கள் உரிய தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், டோக்கன் விநியோகம் குறித்த விவரங்களை நாள்தோறும் மாலை 5 மணிக்குள் தலைமையகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications