பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000: ஆட்சி விட்டு போகும்போதாவது பயனாளிகளுக்கு தரட்டும்: எடப்பாடி பழனிசாமி
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன. அத்துடன் ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அது ரூபாய் ஆயிரமா?, ரூ.2 ஆயிரமா?, ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.5 ஆயிரமா என்று தெரியவில்லை.. அது தொடர்பான ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள கோரிக்கை, தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் தையலூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

அதில், திமுகவை வேரோடு அகற்றவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அதுவே அதிமுகவின் லட்சியம்.. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 5 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது.. அதிமுக ஆட்சியில் 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன..
திமுக அரசு - சம்பளம்
100 நாள் வேலைத்திட்டத்தில் திமுக அரசு வாக்குறுதி காப்பாற்றவில்லை, முறையாக சம்பளம் வழங்கவில்லை.. அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேலை நாட்கள் 150 ஆக உயர்த்தப்பட்டு, சம்பளம் அதிகரிக்கப்படும்..
கோவிட் காலத்தில் வருமானம் இல்லாத போதும் அதிமுக ஆட்சியில் மின்கட்டணம், வீட்டு வரி உயர்த்தப்படவில்லை, தற்போது வருமானம் அதிகரித்த போதும் திமுக அரசு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.. எந்த புதிய மாவட்டமும், மருத்துவக் கல்லூரியும் உருவாக்கப்படவில்லை..
டாஸ்மாக் மூலம் கூடுதல் வசூல் செய்து ஊழல் நடந்துள்ளது.. லேப்டாப் திட்டத்தை நிறுத்தி தற்போது தேர்தலுக்காக மீண்டும் அறிவித்துள்ளது" என்றார்..
பொங்கல் பரிசு தொகுப்பு
அதேபோல பெருங்குடியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மக்கள் வெறுப்பை சம்பாதித்துவிட்டதாகவும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வாறு, வழக்கம்போல் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டிய நிலையில், ஒவ்வொரு பிரச்சாரத்திலும் அவர் வைத்து வரும், பொங்கல் பரிசு தொகுப்பு கோரிக்கையானது, தமிழக மக்களின் கவனம் பெற்று வருகிறது..
காரணம், கடந்த 2025ம் ஆண்டு திமுக அரசு வெறும் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கியது. ரொக்கப் பணம் ஏதும் வழங்கவில்லை. ஆனால் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் சேர்த்து திமுக அரசு வழங்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், "பொங்கல் பரிசுடன் ரூ.5,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும்" என திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ரூ.5 ஆயிரம் - எடப்பாடி பழனிசாமி
நேற்றைய தினம் செங்கல்பட்டு பிரச்சாரத்திலும் இதே கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி முன்வைத்து வருகிறார்.. மக்களிடம் பேசும்போது, "அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுத்தோம். அப்போது 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஸ்டாலின் சொன்னார்... ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டாவது, ஆட்சி முடியும் நேரத்தில் மக்களை புரிந்து கொண்டு பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். திமுக இனிமேல் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் ஆட்சியை விட்டு போகும் போதாவது மக்கள் வாழ்த்தட்டுமே" என்று கூறியிருக்கிறார்.
விடாத எதிர்க்கட்சிகள்
எவ்வளவுதான் பரிசு தொகுப்பு தந்தாலும்கூட, அவையெல்லாம் வாக்குகளாக மாறாது, பொங்கல் பரிசுத் தொகை உயர்ந்து கொண்டே போவதன் மூலம் நமது வாக்கு மதிப்பும் கூடிக் கொண்டே செல்வதாக நாம் தமிழர் கட்சி சீமான், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பாமகவின் சவுமியா அன்புமணி போன்றோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கையையும் எதிர்க்கட்சிகளே வலியுறுத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications