பொங்கல் 2023: ரூ 1000 பரிசுத் தொகை பெற வங்கிக் கணக்கு கட்டாயம்.. தமிழக அரசு புதிய உத்தரவு
சென்னை: பொங்கல் பரிசு தொகை பெற வங்கி கணக்கு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வங்கிக் கணக்கு இல்லாத ரேஷன்கார்டுதாரர்களுக்கு உடனடியாக கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி கொடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது பச்சரிசி, கரும்பு, முந்திரி பருப்பு, சர்க்கரை, ஏலக்காய், திராட்சை ஆகிய பொருட்களுடன் குறிப்பிட்ட ஒரு தொகையை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 1000 ரொக்கம் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி ரூ 2000 ஆக அதிகரித்து கொடுத்தார்.

பொங்கல் பரிசு
இதையடுத்து திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பொங்கல் பரிசாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொடுத்தது. இவை தரமற்றதாக இருந்தாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் இந்த பொருட்களுடன் ரூ 500 ஆவது கொடுக்கப்படும் என எதிர்பார்த்து மக்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. புளியில் பல்லித் தலை, உருகும் வெல்லம் இப்படியாக பல்வேறு விமர்சனங்கள் வந்தன.

மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொங்கலுக்கு கொடுத்த வெல்லம் உருகியதை வைத்து முருகனின் உள்ளம் உருகுதய்யா என்ற பக்தி பாடலை வெல்லம் உருகுதய்யா என பாடி விமர்சனம் செய்திருந்தார். மேலும் அரசு கொள்முதல் செய்த பொருட்கள் தரமற்றவை என்பது நிரூபணமானது. இதனால் இந்த ஆண்டும் இது போல் பொருட்களை வழங்கி அரசுக்கு அவப்பெயர் தேடிக் கொள்ளாமல் இருக்க ரொக்கமாகவே வழங்கிவிடலாம் என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளதாக தெரிகிறது.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து கடந்த 19 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலையின் நிறத்திலும் டிசைனிலும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரொக்கமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் கொடுக்க முடிவு செய்துள்ளது.

2.20 கோடி ரேஷன்கார்டுதாரர்கள்
ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்த போது மொத்தமுள்ள 2.20 கோடி ரேஷன்கார்டுதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை என தெரியவந்துள்ளது. இவர்களுக்கு உடனடியாக கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்க மண்டல இணை பதிவாளர்களிடம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அண்மையில் தெரிவித்தார்.

ஒரு வாரத்திற்குள் வங்கிக் கணக்கு
இதுகுறித்து சண்முகசுந்தரம் மண்டல இணை பதிவாளர்களுடன் வீடியோ கான்பிரன்ஸில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 14.60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே வரும் பொங்கல் பண்டிகையின் போது பயனாளிகளுக்கு ரூ 1000 தொகையானது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றே தெரிகிறது. இதன் மூலம் மோசடியாக ரூ 1000- த்தை பெறுவதை தடுக்கலாம். சரியான பயனாளிக்கு ரூ 1000 கிடைக்கும் என்று தெரிகிறது. மத்திய அரசின் கேஸ் மானியம், விவசாய உதவித் தொகை உள்ளிட்டவையும் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications