பொங்கல் பரிசு.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயா? தமிழக அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எல்லா வருடமும் பொங்கல் சமயத்தில் அரசு சார்பாக சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கரும்பு உட்பட மொத்தம் 21 பொருட்கள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் அரசு மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும், மக்களிடம் வரவேற்பை பெற வேண்டும் என்று திட்டமிட்டு முறையாக பொங்கல் தொகுப்பை வழங்கி இருந்தாலும் கூட சில இடங்களில் இந்த பொங்கல் தொகுப்பு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

விமர்சனம்
முதலில் பொங்கல் தொகுப்பில் சில இடங்களில் பொருட்கள் தரமற்று இருந்ததாக புகார்கள் வைக்கப்பட்டது. அதேபோல் சில இடங்களில் வெல்லம் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. புளியில் பல்லி, ஊசி போன்ற பொருட்கள் இருந்ததாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசை விமர்சிக்க வேண்டும் என்று சில தவறான வதந்திகள் பரப்பபட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த வருடம் சில இடங்களில் மஞ்சள் பைகளில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.

பொருட்கள் என்னென்ன
சில இடங்களில் மஞ்சள் பை தட்டுப்பாடு காரணமாக இந்த பொருட்கள் வாங்க வீட்டில் இருந்தே பைகள் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏலக்காய், பாசிப்பருப்பு, மிளகு, புளி, நெய், வெல்லம், முந்திரி, திராட்சை, கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, பச்சரிசி, முழு கரும்பு, ரவை, கோதுமை மாவு, உளுத்தம் பருப்பு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக கரும்பு உட்பட மொத்தம் 21 பொருட்கள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆலோசனை
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பொங்கல் பரிசு தொடர்பாக அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், நிதி துறை அமைச்சர் பிடிஆர், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அரசு உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த முறை தவறு நடக்க கூடாது. தரமான பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. முக்கியமாக பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் பொருட்களை விற்க கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார். பொங்கலுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களின் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.

1000 ரூபாய்
இல்லையென்றால் மக்களுக்கு பொருட்கள் வழங்காமல், 1000 ரூபாய் பணமாக அட்டைக்கு கொடுத்துவிடலாம். மக்களே பொருட்களை வாங்கிக்கொள்வார்கள். 1000 ரூபாய் கொடுப்பது என்பது மக்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் வரவேற்பை பெறும். பொருட்கள் என்றால் பலர் வாங்க மாட்டார்கள். ஆனால் பணம் என்றால் எல்லோருக்கும் சென்று சேரும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில்தான் ரேஷனில் பொருட்களை விழி பரிசோதனை மூலம் வாங்குவது பற்றி அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டு ரேஷன் கடைகள் அனைத்திலும் புதிய தொழில்நுட்பம் ஒன்று அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

திட்டம் என்ன?
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.இதை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள். புதிய திட்டத்தின்படி மக்கள் தங்கள் கண்களை காட்ட வேண்டும். இதை லேசர் கருவிகள் பதிவு செய்யும். கண் கருவிழி பதிவுகள் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும். இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில் தொடங்கப்பட்டது. அதன்பின் இன்னும் சில கிராமங்களில் இதே திட்டம் தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பொங்கல் நேரத்தில் இந்த திட்டம் பெரம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அமலில் இருக்கும். கண்களை காட்டி மக்கள் பொங்கல் பரிசு பொருட்களை வாங்க முடியும். அதன்பின் மற்ற மாவட்டங்களில் விரைவில் திட்டம் அமலுக்கு வரும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications