பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை.. திமுகவுக்குப் பின்னடைவா?..வழக்கறிஞர் விளக்கம்!
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் 3 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
அந்தத் தீர்ப்பால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அவரது பதவி உடனடியாகப் பறிக்கப்படும் என்று சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள். இதனால் திமுகவுக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இந்தத் தீர்ப்பு திமுகவுக்குப் பின்னடைவைத் தருமா? அக்கட்சிக்கு இது நெருக்கடியா? என்ற கேள்விகளுக்கு விளக்க அளித்துள்ளார் திமுக வழக்கறிஞர் சரவணன்.
"செல்வி ஜெயலலிதாவின் வழக்கையும் பொன்முடியின் வழக்கையும் ஒப்பிட முடியாது. அவர் 66 கோடி ரூபாய் ஊழல். அதற்கு 4 வருடங்கள் சிறைத் தண்டனைக் கொடுத்தார்கள்.

ஆனால், பொன்முடி வழக்கில் ஒரு கோடியே 70 லட்சம் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். அதற்கு 3 வருடங்கள் சிறைத் தண்டனைக் கொடுத்திருக்கிறார்கள்.
அதுவும் 25 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முன்பே கீழமை நீதிமன்றம் அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறது.
நான் ஏற்கெனவே சொன்னதை போல், இந்த வழக்கில் அடிப்படை தவறு என்னவென்றால் இந்த மாதிரியான வழக்குகளில் உரியவரிடம் என்ன முதலில் கேட்பார்கள் என்றால், உங்களுடைய வருமானம் எங்கிருந்து வந்தது என்பதை உரிய நேரத்தில் வருமானவரித்துறையிடம் தெரிவித்திருக்கிறீர்களா? என்பதைத்தான் கேட்பார்கள்.

அப்படிப் பார்த்தால், இந்த வழக்கில் பொன்முடி வருமானவரித்துறையிடம் முறையாகக் கூறி இருக்கிறார். அதனால்தான் கீழமை நீதிமன்றம் அவரை விடுவித்தது.
ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதி என்ன சொல்கிறார் என்றால், நீங்கள் வருமானவரித்துறைக்கு முறையாகக் கூறி இருக்கிறீர்கள், அதற்கான தனி சாட்சிகள் எதுவுமே இல்லையே? அதை எப்படி நாங்கள் நம்புவது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நீதிபதியின் இந்த வாதம் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது. அதையே இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே இந்தத் தீர்பானது உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் போது கட்டாயம் மாற்றி அமைக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்கிறார்
அவரிடம் அரசியல்ரீதியாகக் கூட இந்தத் தீர்ப்பு பொன்முடிக்குப் பின்னடைவு இல்லை என்கிறீர்களா? என்று கேட்டதற்கு, "அரசியல்ரீதியாக தனிப்பட்ட வகையில் அவருக்குப் பின்னடைவுதான். 25 ஆண்டுகள் முன்னதான வழக்கை எடுத்து வைத்து இப்போது அரசியல்ரீதியாக பழிவாங்க நினைத்துச் செய்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். அது எப்படி திமுகவுக்குப் பின்னடைவாக இருக்கும்?

பாஜகவில் கூடத்தான் பல வழக்குகளில் அவர்களது கட்சிக்காரர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதற்காக அந்தக் கட்சிக்குப் பின்னடைவு வந்துவிட்டதா என்ன?
அந்தக் கட்சிக்காரர்களுக்கு 25 வருடங்கள் வரைகூட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பின்னடைவு என்று ஏன் யாரும் சொல்ல மறுக்கிறார்கள்? அதை பாஜகவுக்குப் பின்னடைவு என்று யாரும் விவாதிக்கவில்லையே ஏன்" என்கிறார்












Click it and Unblock the Notifications