பாஜகவை இடைவிடாமல் வெளுக்கும் பொன்னையன் விமர்சனம்- அவரது சொந்த கருத்து..ஓ.பன்னீர்செல்வம் எஸ்கேப்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சிக்கும் அதிமுக மூத்த தலைவர் பொன்னையனின் கருத்து அவரது சொந்த கருத்து என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், அ.தி.மு.க பின்னுக்குத் தள்ளபடுவதாக தமிழ்நாட்டில் மறைமுக பிரசாரம் நடந்து வருகிறது. ஆகையால் அ.தி.மு.க வினர் எச்சரிக்கையாவும், விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும். காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரங்களில் தமிழ்நாடு பா.ஜ.க மக்களுக்காக குரல் எழுப்பவில்லை. தமிழ்நாடு பா.ஜ.கவின் இரட்டை நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அ.தி.மு.க-வினர் அம்பலப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

பாஜக மீது விளாசல்
மேலும் தமிழகத்தில் அதிமுகவே பிரதான எதிர்க்கட்சி; பாஜக பிரதான எதிர்க்கட்சி என்பது மாயத்தோற்றம். அதிமுக வளருவது என்பது பாஜகவுக்கு நல்லது அல்ல. ஒரு 100 பேரை பிடித்து கொண்டு வந்து போராட்டம் நடத்தினாலே பிரதான எதிர்க்கட்சியாகிவிட முடியாது எனவும் பொன்னையன் கடுமையாக சாடியிருந்தார்.

மத்திய அரசு மீது பாய்ச்சல்
அதேபோல் கூட்டாட்சி முறையின் அடிப்படை விதிகளை மீறி ஜிஎஸ்டி பெயரில் மாநிலத்தின் வருவாயை மத்திய அரசு பறித்து கொள்கிறது. மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட நிர்வாக பாணியை அதிமுக எதிர்க்கிறது. இந்த விவகாரங்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் பொன்னையன் கூறினார்.

பாஜக சாடல்
பொன்னையனின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி. சீட் கிடைக்காத நிலையில்தான் பொன்னையன் இப்படி பேசுகிறார் என பாஜகவினர் விமர்சித்தனர். பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறுகையில், அதிமுகவுடனான கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் பொன்னையன்; ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவர் அண்ணாமலை என்றார்.

சொந்த கருத்து- ஓபிஎஸ்
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைப்பு செயலாளர் பொன்னையனின் கருத்து அவரது சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என கூறினார். இப்பேட்டியின் போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடன் இருந்தார். இதனால் பொன்னையனின் கருத்தில் இருந்து அதிமுக தலைமை விலகி நிற்கிறது என்பதை ஓபிஎஸ் பேட்டி வெளிப்படுத்தி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications