உளவுத்துறை தோல்வி.. கரூர் துயரச் சம்பவத்துக்கு ஆளுங்கட்சியே பொறுப்பு.. பொன்வில்சன் சரமாரி விமர்சனம்
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த உயிர்பலிகளுக்கு காரணம் அறியாமையா? சுயநலமா? ஆட்சியாளர்களின் கவனக்குறைவா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? சதியா? இவ்வளவு வகையிலும் விசாரிக்கப்பட வேண்டும் என அரசியல் விமர்சகர் பொன் வில்சன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை, நாமக்கல்லில் விஜய் பரப்புரை மேற்கொண்ட பின்னர், இரவு 7 மணியளவில் கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் மக்களிடம் உரையாற்றினார் விஜய்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும், இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதது. இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கரூரில் நடந்த இந்த துயரச் சம்பவத்துக்கு ஆளுங்கட்சியே பொறுப்பு என்றும், காவல்துறை பாதுகாப்பு குறைபாடே இதற்குக் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன் வில்சன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
பொன் வில்சன் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கூட்டத்தில் இப்படி ஒரு இழப்பு எந்தக் காலத்திலும் ஏற்பட்டதில்லை. பச்சிளம் குழந்தைகள் 10 பேர் இறந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் யார் மீது குறை என்பது இப்போதைக்கு தெரியாது. அறியாமையா? சுயநலமா? ஆட்சியாளர்களின் கவனக்குறைவா? காவல்துறையின் மெத்தனப்போக்கா? சதியா? இவ்வளவு விஷயங்களும் இதில் இருக்கிறது. இதில் எல்லா வகையிலும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஆளுங்கட்சி தரப்பில் தான் அதிகபட்ச தவறுகள் இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. தவெகவை பொறுத்தவரை புதிய கட்சி, அங்கு கட்டுப்பாடற்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த கட்சி. காவல்துறை அனுபவம் மிக்கது. உளவுத்துறை கையில் இருக்கிறது. இதையெல்லாம் கையில் வைத்திருக்கிறீர்கள்.
ஏற்கனவே, திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூரில் தவெக நடத்திய கூட்டத்தை பார்த்துவிட்டோம். அந்தக் கூட்டம் எவ்வளவு கட்டுப்பாடின்றி இருக்கிறது, எவ்வளவு கூட்டம் வருகிறது? எந்த வயது வரம்பில் அதிகமானோர் வருகிறார்கள், பெண்கள், குழந்தைகள் எவ்வளவு பேர் வருகின்றனர், அடிப்படை தேவைகள் இருந்ததா என்பதகெல்லாம் உளவுத்துறை தகவல் இருக்கும் இல்லையா?
அந்த அனுபவத்தை வைத்துத்தானே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எவ்வளவு கூட்டம் வரும் என்று கணிக்க வேண்டும்.. அனுமதி கொடுக்கும் இடத்தில் பாதுகாப்பை சரிவர தர வேண்டும். உங்கள் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications