பூண்டி கலைவாணன் அப்செட்டில் இருக்கிறாரா? டிஆர் பாலு தந்த அதிரடி பதில்
சென்னை: டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், 'பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலருக்கு இதில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறதே' என்ற செய்தியாளரின் கேள்விக்கு திமுக எம்பி டிஆர் பாலு பதில் அளித்துள்ளார்.
திமுக அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் அவர்களின் துறைகளை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி இன்று அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது.
பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர், அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிடிஆர் வகித்து வந்த நிதித்துறை தங்கம் தென்னரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை, புதிய அமைச்சராக பொறுப்பேற்ற திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமி நாதனுக்கு , தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக ஐடி விங் செயலாளரும், மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்றதை திரூவாருரில் உள்ள பூண்டி கலைவாணனின் ஆதரவாளர்கள் எதிர்ப்பதாக செய்திகள் வெளியாகின.திருவாரூர் தொகுதி எம்எல்ஏவான பூண்டி கலைவாணன், கலைஞர் கருணாநிதியின் தீவிர விசுவாசியாவர். ஸ்டாலினுக்கும் நெருக்கமானவர் ஆவர்.
நீண்ட காலமாக கட்சியில் இருக்கும் பூண்டி கலைவாணனுக்கு அமைச்சர் பதவி இதுவரை தரப்படவில்லை என்றும், ஆனால் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி தரப்படுவதாகவும் டுவிட்டரில் சிலர் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். அதேநேரம் பூண்டி கலைவாணன் இதுபற்றி வெளிப்படையாக எந்த கருத்துவும் தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் டிஆர்பி ராஜா பதவியேற்கும் முன்பு, ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பியும், டி.ஆர்.பி.ராஜாவின் தந்தையுமான டி.ஆர்.பாலு பேசுகையில், "தமிழக முதல்வரின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி மிகச் சிறப்பான அமைச்சர் என்று நல்ல பெயரை டிஆர்பி ராஜா எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலருக்கு இதில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறதே' என்ற கேள்விக்கு, "இல்லை.. இல்லை.. அவர் எங்களது நண்பர். எங்களுடைய மாவட்டச் செயலாளர். இவர் அமைச்சராக அவரும் ஒரு காரணம். அவர்தான் மிக முக்கியக் காரணம்" என்று டிஆர் பாலு கூறினார்.












Click it and Unblock the Notifications