பூண்டி கலைவாணன் அபார வெற்றி..வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பித்த மகிழ்ச்சியில் தொண்டர்கள்
Recommended Video
சென்னை: கருணாநிதியின் சட்டசபை தொகுதியான திருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்.18 மற்றும் மே 19 ஆகிய இரு தேதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதில் 22 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. திமுகவின் எஃகு கோட்டை என்பதை காட்டிலும் கருணாநிதியின் எஃகு கோட்டையாக திகழ்ந்து வருகிறது திருவாரூர் தொகுதி.

வேட்பாளர்
தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்துக்கு பின்னர் திருவாரூர் தொகுதியில் கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற கருணாநிதி, அடுத்த முறையும் எம்எல்ஏவாகவே தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி அந்த தொகுதியை கைப்பற்றியது.

மீண்டும் கருணாநிதி
பின்னர் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் திமுக திருவாரூர் தொகுதியை கைப்பற்றி வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக இருந்து வந்தார் கருணாநிதி. இவர் கடந்த ஆண்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு தகுதிவாய்ந்த, வெற்றி வாய்ப்பு வாய்ந்த வேட்பாளரை திமுக தேடி வந்தது.

திமுக தொண்டர்கள்
பின்னர் பூண்டி கலைவாணனை வேட்பாளராக அறிவித்தது. கருணாநிதி வைத்திருந்த தொகுதி கலைவாணனுக்கு வழங்கப்பட்டதாலும் கருணாநிதி இறப்புக்கு பின்னர் திருவாரூர் தொகுதி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதாலும் அந்த தொகுதியின் வெற்றிக்காக திமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர்.

கருணாநிதி
திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்தை விட 63,122 வாக்குகள் வித்தியாசம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் பூண்டி கலைவாணன் 1,15,223 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம் 52101 வாக்குகளை பெற்றார். கடந்த முறை கருணாநிதி 1,21,473 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரோ ஏஎன்ஆர் பன்னீர் செல்வம் 53107 வாக்குகள் பெற்றார்.












Click it and Unblock the Notifications