இந்த பம்மாத்து எல்லாம் வேண்டாம்! நிர்மலா சீதாராமனுக்கு பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் பதிலடி!
சென்னை: சுனாமியை கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்கிற பம்மாத்து எல்லாம் வேண்டாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்திருக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தலைவர் சுந்தர்ராஜன்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யும் போது முதலமைச்சர் எங்கே இருந்தார்? என்றும் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது, அப்படி இதுவரை அறிவித்தது இல்லை எனவும் நேற்றைய தினம் நிர்மலா சீதாராமன் கூறியது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலா சீதாராமனுக்கு நேற்றைய தினமே தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்திருந்தார். தவிக்கும் தமிழ்நாட்டு மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்திவிட்டார் எனவும் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையான முறையில் சாடியுள்ளனர்.
அந்த வரிசையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தலைவர் சுந்தர்ராஜனும் நிர்மலா சீதாராமனுக்கு காட்டமான பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
“சுனாமியைக் கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை”- நிர்மலா சீத்தாராமன்
''இந்தியாவின் பேரிடர் மேலாண்மை சட்டம், சுனாமி வந்து ஒரு வருடம் கழித்து தான் இயற்றப்பட்து, அப்போதுதான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படது, பேரிடர் மேலாண்மை என்கிற வார்த்தையை கற்றுக் கொடுத்ததே சுனாமிதான். அதனால் சுனாமியை கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்கிற பம்மாத்து எல்லாம் வேண்டாம்.''
''தமிழ்நாடு கேட்பது இதுதான், “வழக்கமாக sdrf க்கு கொடுக்கவேண்டிய நிதி இல்லாமல், நாங்கள் பேரிடருக்கும் கேட்கும் தொகையை அல்லது அதில் ஒரு பாதியாவது கொடுங்கள்” என்பதுதான். ''
''இதை ஒன்றும் யாசகமாக கேட்கவில்லை, இந்திய ஒன்றியத்திற்கு மிக அதிகமாக வரியை கொடுக்கும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது என்கிற உரிமையில்தான் கேட்கிறோம்.'' இவ்வாறு பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications