போன ஞாயிறு முதல்வரிடம் புகார்! இந்த சண்டே விஜய் கட்சிக்கு ஆதரவு! என்னாச்சு "பூவுலகின் நண்பர்களுக்கு"
சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அதை பூவுலகின் நண்பர்கள் குழு வரவேற்பதாக தெரிவித்துள்ளது. அது போல் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து தீர்மானம் இயற்றப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது. போன ஞாயிற்றுக்கிழமை தவெக மாநாடு நடந்த போது பலர் மயங்கி விழுந்த போது அங்கு வெப்பத்தை குறைக்க தண்ணீர் பிய்ச்சி அடிக்க வேண்டும் என முதல்வரிடம் பூவுலகின் நண்பர்கள் குழுவின் சுந்தரராஜன் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடந்தது. அப்போது இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக் காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு. இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கும் நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஓர் அங்குலம் நிலத்தைக் கூடக் கையகப்படுத்தக் கூடாது என்று இச்செயற்குழு. ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரும் தீர்மானம் கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தொழில் நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கச் சென்னையைப் போன்று, கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் தொடர்பான தீர்மானங்களை பூவுலகின் நண்பர்கள் குழு வரவேற்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்குழு சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழக செயற்குழுக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம், கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம், என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் ஆகிய முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் இயற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications