ஒரே ஒரு ரூபாயால்.. சென்னையில் உள்ள பிரபல கடைக்கு "மெகா" அபராதம்.. MRP ரேட்டால் வந்த சிக்கல்
சென்னை: தலைநகர் சென்னையில் செருப்பை எம்ஆர்பி விலையைக் காட்டிலும் ஒரு ரூபாய் அதிகமாக விற்ற சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாம் எந்தவொரு பொருளை வாங்கினாலும் அதில் எம்ஆர்பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலை இருக்கும். அதாவது இந்த எம்ஆர்பி விலையைக் காட்டிலும் கூடுதலாக எந்தவொரு பொருளையும் விற்பனை செய்யக் கூடாது என்பதே சட்டமாகும்.
எம்ஆர்பி விலையைக் காட்டிலும் கூடுதலாக எதாவது பொருளை விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கையை எடுக்கலாம். அப்படியொரு சம்பவத்தில் சிக்கிய நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது: சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் எம் சதீஷ் என்பவர் கடந்த 2022 ஏப்ரல் மாதம் சென்னை சில்க்ஸ் திருவள்ளூர் கிளைக்குச் சென்றுள்ளார். அங்கே அவர் ரூ.2,545க்கு ஆடைகள் மற்றும் காலணிகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு ஜோடி செருப்பின் விலை எம்ஆர்பி-இல் ரூ 379 என்று இருந்துள்ளது. இருப்பினும், அதைக் கடை உரிமையாளர்கள் நீல நிற பேனாவால் அடித்துள்ளனர்.
அதற்கு மேலாகவே புதிதாக எம்ஆர்பி ரூ, 380 என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது உண்மையாகவே பிரிண்ட் செய்யப்பட்ட எம்ஆர்பியை விட ரூ 1 அதிகமாக அவர்கள் வைத்துள்ளனர். இது இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது என்கிறார் சதீஷ். இது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். இருப்பினும், அவர்கள் தங்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டனர்.
வழக்கு: இதையடுத்து அவர் அங்கிருந்த சேல்ஸ் மேற்பார்வையாளரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், அவர்களும் உரியப் பதில் அளிக்கவில்லை. மாறாக சதீஷ் அவமானப்படுத்தும் வகையில் அவர்கள் பேசியுள்ளனர். அவர்கள் உரிய பதிலை அளிக்காத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதற்காகக் கூறி உள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் சதீஷ் வழக்கு தொடர்ந்தார். இதில் ரூ. 15 லட்சம் இழப்பீடும் கோரியிருந்தார்.
விசாரணையில் தனது குற்றச்சாட்டுகளை மறுத்த அந்த நிறுவனம், காலணிகளின் ரியல் விலையை டீலர் 399 ரூபாயாக நிர்ணயம் செய்ததாகத் தெரிவித்தது. டிஸ்கவுண்ட் போக அது ரூ.379.05க்கு வந்ததாகவும் அதை ரவுண்ட் ஆப் செய்ய விலை ரூ.380 என மாற்றப்பட்டதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அபராதம்: மேலும், இந்த காலணிகளை டீலரிடம் திரும்ப அனுப்பவே இருந்ததாகவும் அதற்கு அந்த நபர் தற்செயலாக அதை வாங்கிவிட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், விலை மாற்றப்பட்டது குறித்து விசாரணையின் போது சென்னை சில்க்ஸ் சார்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது. அதேநேரம் வாடிக்கையாளரை யாரும் அவமதிக்கவில்லை என்றும் ஆதாரத்தை அழிக்கவும் யாரும் முயலவில்லை என்றும் அவர்கள் குறைதீர்ப்பு மன்றத்தில் வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட குறை தீர்ப்பு மையம், எம்ஆர்பிக்கு மேல் ரூபாய் 1 என்பது மிகக் குறைந்த தொகையாக என்ற போதிலும், அது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றும் இது நுகர்வோருக்கு நஷ்டத்தையே ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்தது. மேலும், சதீஷுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சமும், வழக்குச் செலவுக்காக மேலும் ரூ.5 ஆயிரமும் வழங்கச் சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications