பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்- ஆளுநர் ஆர்.என்.ரவி ஓபன் அரசியல் அட்டாக்
சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்; அரசியல் லாபங்களுக்காக வன்முறையை தூண்டுபவர்கள் பயங்கரவாதிகள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படையாக சாடியுள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஏற்கனவே நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த போது அம் மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தலையிட்டார் என்பது குற்றச்சாட்டு. இதனால் ஆளுநர் பதவியில் இருந்து ரவி மாற்றப்பட்ட போது நாகாலாந்து மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடையா? தீவிரம் காட்டுகிறதா மத்திய அரசு? பரபர பின்னணி
தமிழகத்தில் எதிர்ப்பு
தமிழகத்தில் ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற காலம் முதல் இதுவரை தமிழ்நாடு அரசின் பல்வேறு சட்ட முன்முடிவுகளை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். இதனால் ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்திலேயே குரல் கொடுத்தது திமுக. ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் தமிழகத்தின் பல இடங்களில் கறுப்பு கொடி போராட்டம் நடத்தின.
அதிகாரம் பறிப்பு
இதன் அடுத்த கட்டமாக, ஆளுநர் வசம் இருந்த துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை பறிக்கும் மசோதாவும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய சர்ச்சைகளின் தொடர்ச்சியாக இப்போது பகிரங்கமாக அரசியல் விமர்சனங்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்துள்ளார்.
அரசியல் அட்டாக்
சென்னையில் கல்லூரி ஒன்றில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுகிறவர்கள் பயங்கரவாதிகள். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது. ஃபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கம் மிகவும் ஆபத்தானது. மனித உரிமை, அரசியல், மாணவர் இயக்கங்கள் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகவும் செயல்படுகிறது. நாட்டை சீர்குலைப்பதுதான் ஃபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நோக்கம். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். .
Recommended Video
யுத்தத்துக்கு ஆள் அனுப்புகிறது
மேலும் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் யுத்தம் நடத்தவும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடவும் ஆட்களை அனுப்புகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா. இதனை சில கட்சிகள் ஆதரிப்பது பெரும் தவறு; ஆபத்தானது. நாட்டுக்கு அச்சுறுத்தலானது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த அரசியல் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பகிரங்கமாக இப்படி அரசியல் விமர்சனங்களை ஒரு இயக்கம் மீது முன்வைக்கலாமா? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.