11 வருடங்களாக.. அலங்கோலமாக முடங்கி கிடந்த தூண்கள்.. இப்போ சென்னையின் ஹாட் ஸ்பாட்டாக மாறுது!
சென்னை: 11 வருடங்களாக முடங்கி இருந்த சென்னை துறைமுக மதுரவாயல் பாலம் தற்போது வேகமாக கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக இங்கே தூண்கள் அமைக்கப்படாமல் பணிகள் முடங்கி இருந்த நிலையில் தற்போது இங்கே துரிதமாக பணிகள் நடைபெற்று தூண்கள் வேகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரவாயல் - துறைமுகம் இடையே பாலம் அமைக்கும் திட்டம் பல காலமாக ஜெயலலிதா
ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம். மதுரவாயல் வழியாக சென்னை உள்ளே நுழையும் பலர் பாதி கட்டப்பட்டு நிற்கும் பாலங்களை பார்த்து இருப்பார்கள். வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்டும் இடங்களாக காட்சி அளிக்கும்.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிறுத்தினார். கூவத்தின் மீது பாலம் கட்டுவது சுற்றுசூழலை பாதிக்கும் என்று கூறி திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார். தமிழ்நாட்டில் அப்போது அரசியல் ரீதியாக கடுமையாக ஈகோ மோதல் நிலவி வந்தது. முக்கியமாக புதிய சட்டசபை கூட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதனால் இந்த திட்டமும் கைவிடப்பட்டது , கட்டப்பட்ட பாலங்கள் அப்படியே நின்றன.
அந்த திட்டம் அதன்பின் மேம்படுத்தப்படாமலே இருந்தது. 2011ல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. 11 வருடமாக திட்டம் முடங்கி கிடந்தது. இங்கு வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சென்னைக்கே அலங்கோலத்தை கொடுக்கும் விதமாக மாறியது.
சென்னை துறைமுக - மதுரவாயல் பாலம் - பணிகள் தீவிரம்
தற்போது 21 கி.மீ சென்னை துறைமுக - மதுரவாயல் இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியாக வானகரத்தில் தூண்கள் வரத் தொடங்கியுள்ளன. அதேபோல் மதுரவாயல் தாண்டி தூண்கள் இருந்த பகுதிகளில் இரண்டு அடுக்கு பாலங்கள் வர தொடங்கி உள்ளன. சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 19.8 கி.மீ நீள இரட்டை அடுக்கு உயர்மட்ட விரைவுச்சாலை திட்டம் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. இத்திட்டம் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
19.8 கி.மீ நீள இரட்டை அடுக்கு உயர்மட்ட விரைவுச்சாலை
இந்த விரைவுச்சாலையின் கீழ் அடுக்கில் மொத்தம் ஏழு ஏறுதளங்களும், ஆறு இறங்குதளங்களும் அமைக்கப்பட உள்ளன. வாகனங்கள் எளிதாகச் சென்றுவர இது உதவும். குறிப்பாக, இதன் மேல் அடுக்கு கனரக வாகனங்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்கு கனரக வாகனங்கள் சென்னை துறைமுகத்தை நேரடியாக அடைவதற்கு வழிவகுக்கும். இதன் மூலம் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் நகர்ப்புற சாலைகளுக்குள் வராமல் நேரடியாக விரைவுச்சாலையை பயன்படுத்த முடியும். இது பயண நேரத்தையும், எரிபொருள் செலவையும் கணிசமாகக் குறைக்கும்.
மதுரவாயல் சந்திப்பு ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என்று கூறப்படுகிறது.
சென்னை துறைமுக - மதுரவாயல் இரட்டை அடுக்கு பழமை
இந்த பாலம் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும். இந்த 20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும். அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும்.
இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள்
இந்த பணிகளின் ஒரு பகுதியாக சமீபத்தில்தான் அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டது. 20.9 கி.மீ. துறைமுகம்-மதுரவாயல் வழித்தடத்திற்காக இந்த கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. மாநில நெடுஞ்சாலைத் துறை 200 மீட்டர் நிலத்தை மீட்டெடுத்தது.
இன்னும் 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. இந்த வழித்தடத்தின் பெரும்பகுதி ஆற்றின் மீது உயர்த்தப்பட்டதாக கட்டப்பட உள்ளது. இதற்கிடையில், பல்லாவரம்-குன்றத்தூர்-பூந்தமல்லி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் புறநகர் இணைப்பை மேம்படுத்தவும் படிப்படியாக வெளியேற்றம் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்பார்த்ததை விட வேகமாக துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு உயர்நிலை சாலைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த ரூட்டில் பல இடங்களில் புதிய பில்லர்கள் முழுமையாக நிறுவப்பட்டு உள்ளன. இன்னொரு பக்கம் இந்த திட்டத்திற்காக கூவத்தில் தற்போது தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன.
துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு பாலத்தின் பணிகளுக்கு இந்திய ராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை பெறுவதில் உள்ள தாமதத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான இறுதிக்கட்டத்தில் பணிகள் நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வும் செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications