சென்னை கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்.. 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!
சென்னை: பக்ரீத் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து, மக்கள் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலயில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை கிளாம்பாக்கத்தில் 2 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும் நெரிசல் குறையவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து வெளியூர் செல்லவும், பண்டிகை முடிந்து வெளியூரிலிருந்து சென்னை திரும்புவதற்கும் மக்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். அரசு தரப்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் கூட, பயணிகள் இதனை மறுத்துள்ளனர். பேருந்துக்காக நீண்ட நேரமாக காத்திருப்பதாகவும், குறைந்த அளவில்தான் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 6ம் தேதி இரவு சென்னை கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் லட்சக்கணக்கில் பயணிகள் கூடினர். ஆனால் அவர்கள் செல்லும் ஊருக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இப்படி இருக்கையில், விடுமுறை முடிந்து தற்போது சென்னைக்கு மக்கள் திரும்ப தொடங்கியுள்ளளனர்.
இதனால் கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் மக்கள் சென்னை திரும்பியதால் இந்த நெரிசல் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கிளாம்பாக்கம் மட்டுமல்லாது விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதியிலும் கடும் நெரிசல் ஏற்பட்டிருந்தது. தனியார் பேருந்துகள் மற்றும் கார்களால் இந்த நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. எனவே குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்குள் வர முடியாமல் மக்கள் தவித்துள்ளனர்.
இந்த நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக தனியார் வாகனங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு இரண்டு கார்கள் அடைத்துக்கொள்ளும் இடத்தில் ஒரு பேருந்தை நிற்க வைக்கலாம். ஆனால் பேருந்தில் 50 பேரை வரை பயணிக்க முடியும். காரில் 4-8 பேர் வரை மட்டுமே பயணிப்பார்கள். எனவே போதுமான அளவில் அரசு பேருந்துகளை அதிக அளவில் இயக்குவதன் மூலமும், சனி ஞாயிற்று கிழமைகளில் கூடுதல் ரயில்களையும் இயக்குவதன் மூலமும் நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.
இதற்கு மாற்றாக புதிய சாலைகளை போடுவது, மேம்பாலங்களை கட்டுவது போன்ற திட்டங்களால் பெரிய அளவில் பலன் இருக்காது. இது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தாது என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications