தேர்தல் முடிந்தது.. சென்னை திரும்பும் மக்கள்.. நெல்லை ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
சென்னை: வாக்களிக்க சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நெல்லை ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுதவிர நாகர்கோவில் - பெங்களூர், நாகர்கோவில் - கோவை ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்காக வாக்களிக்க சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால், 21 ஆம் தேதி முதல் ரயில், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு இருந்தன.

வாக்களிக்க சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். ஐடி, தனியார் அலுவலகங்கள் என பல்வேறு பணிகளில் இருப்பவர்கள் இன்று விடுமுறை முடிவதால் மீண்டும் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது.
நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயிலில் பயணிகள் நிற்க கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் அளவுக்கதிகமாக உள்ளது. முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட ரயில் என்பதால் அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் அளவுக்கதிமாக இருந்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பயணிகள் சென்னை, கோவை உள்ளிட்ட பணி செய்யும் நகரங்களுக்கு புறப்பட்டு வருகிறார்கள்.
அனந்தபுரி, நெல்லை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் டிக்கெட்டுகள் அனைத்தும் புல் ஆகிவிட்டன. இதுதவிர நாகர்கோவில் - பெங்களூர், நாகர்கோவில் - கோவை ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதில் பயணிகள் முண்டியடித்து ஏறி பயணித்ததை பார்க்க முடிந்தது. ரயில்கள் மட்டுமல்லாது நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, சென்னை, கோவை, திருப்பூர் பஸ்களிலும் இன்று பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்து இருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்ல வழக்கத்தைவிட இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் வேறுவழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலையையும் பார்க்க முடிந்தது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு ஏசி ஸ்லீப்பர், இருக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டினர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. சென்னை நோக்கி பேருந்துகளிலும் கார்களிலும் பயணிகள் அணிவகுத்து வருவதால் திருச்சி - சென்னை சாலையில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications