"சம்மனை இங்கே ஒட்டிச் செல்லவும்".. சீமான் வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு போர்டு!
சென்னை: "சம்மனை இங்கே ஒட்டிச் செல்லவும்" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு முன்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. போலீசார் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று புதிதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான நெருக்கடியில் சிக்கி உள்ளார். பாலியல் பலாத்கார வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அளித்திருந்தனர். ஆனால், நேற்று ஆஜராக அனுப்பப்பட்ட சம்மனுக்கு 4 வார அவகாசம் கேட்டு சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் போலீசில் மனு அளித்தனர்.
இதையடுத்து, இன்று (பிப்ரவரி 28) ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் நேற்று மதியம் போலீசார் சம்மன் ஒட்டினர். அதில், பிப். 28 ஆம் தேதி (இன்று) ஆஜராகத் தவறினால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த சம்மனை கிழித்தெறிந்தார்.
சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டதை அடுத்து நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் போலீஸார் நேற்று பிற்பகல் சீமான் வீட்டுக்குச் சென்றனர். விசாரிக்கச் சென்ற போலீசாரை, வீட்டின் பாதுகாவலர் தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சம்மனை கிழித்ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்தபோது சீமான் மனைவி கயல்விழி வீட்டிலிருந்து வெளியே வந்து, காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடுமாறு முறையிட்டார். கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினர், போலீஸார் அத்துமீறி நுழைந்ததாகப் புகார் தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், என் மீது நடிகை தெரிவித்த புகார் குறித்து, நான்தான் வழக்கு தொடர்ந்தேன். இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அந்த நடிகை வெளியே வரவில்லை. திமுகவால் என்னை சமாளிக்க முடியவில்லை என்பதால், இந்த விவகாரத்தை பரபரப்பாக்கி உள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று விசாரணைக்கு என்னால் வர முடியாது. சென்னை வந்த பிறகு காவல் நிலையம் வருகிறேன் என்று கூறினேன். நான் ஓசூரில் இருப்பது போலீசாருக்குத் தெரியும். ஆனாலும் என் வீட்டில் சம்மன் ஒட்டி அவமானப்படுத்த முயல்கின்றனர். இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். நான் நிச்சயம் விசாரணைக்கு ஆஜராவேன். ஆனால், கட்டாயப்படுத்தினால் என்னால் காவல் நிலையத்தில் ஆஜராக முடியாது. என்னை என்ன செய்துவிட முடியும்? என ஆவேசமாகப் பேசினார்.
இந்நிலையில், இன்று சீமானுக்கு மீண்டும் சம்மன் வழங்க ஈரோடு போலீசார் சென்னை வந்துள்ளனர். ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது வெடிகுண்டு வீசுவேன் என சீமான் பேசியது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே, சீமான் வீட்டு முன்பாக அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், "சம்மனை ஒட்டு சார்வு செய்ய விரும்பும் காவல் அதிகாரிகள் இங்கே ஒட்டிச் செல்லவும்" என எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications