சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் புயல் மழை புரட்டி போட்ட நிலையில், அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் பல இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. மழை நீர் வடியாமல், சாக்கடை நீருடன் சேர்ந்து வீடுகளுக்கு புகுந்திருக்கிறது. மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கள்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.
இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications