மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள்
சென்னை: தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தூக்க தொடங்கியுள்ளது. சென்னை அம்பத்தூர் ஒரகடம், கள்ளி குப்பம், மாதனங்குப்பம், புதூர், மேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கோபமடைந்து நள்ளிரவில் சாலைக்கு வந்தும், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம், "கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கு உள்ளோம். கடந்த 20 நாட்களாக மின்சார விநியோகம் சீராக இல்லை. நள்ளிரவு 4 முறை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. எப்படி தூங்குவது. கேள்வி கேட்டால் மிரட்டுவதாக எடுத்துக் கொள்ள கூடாது. வேண்டுமென்றால் போலீஸை கூப்பிடுங்கள். கேள்வி கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. புகார் கொடுக்க அழைத்தாலும் எடுப்பதில்லை. 24 மணி நேரமும் அந்த எண்ணில் இருப்போர் பேசிக் கொண்டிருப்பார்களா.

மக்கள் கேள்வி
எங்களுக்கு கரன்ட் வேண்டும். அதற்காக கத்த தான் செய்வோம். எங்களுக்கு உரிய பதில் கொடுத்து செல்லுங்கள். இது நல்லதிக்கில்லை. வேலை முடித்து விட்டு நிம்மதியாக தூங்குவதில்லை. நாங்கள் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள். எங்கள் உரிமையை கேட்டால் வாக்குவாதம் செய்வதாக கூறுவதா. எவ்வளவு நேரம் நாங்கள் காத்திருப்பது. மக்களிடம் இப்படித்தான் பேசுவீர்களா. ஐயா சாமி என்று பேச வேண்டுமா.
யார் அலுவலர்கள் என்று எங்களுக்கு தெரியுமா. எங்களை அலைக்கழிப்பது தான் உங்கள் வேலையா. நாங்கள் வெளியே இருந்து அவ்வளவு கத்து கத்தறோம். எதுவுமே பேசாமல் இருந்தால் எப்படி. நாங்கள் சரியாக மின் கட்டணம் செலுத்துகிறோம். நேற்றும் கரன்ட் இல்லை, இன்றும் கரன்ட் இல்லை என்றால் எப்படி. குழந்தைகள் எப்படி தூங்குவார்கள். நீங்கள் ஃபேன் காற்றில் தானே அமர்ந்துள்ளீர்கள். எங்களை பார்த்தால் பைத்தியக்காரன் மாதிரி இருக்கா" என்றனர்.
அதிகாரிகள் மெத்தனம்
அதற்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காமல் மக்களை குறை சொல்லி கொண்டிருந்தனர். இதனால் மக்கள் கோபமடைந்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பொது மக்கள், "சென்னையில் இன்றைக்கு தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. கரன்ட் இல்லை என்பதால் வீட்டிற்குள் இருக்க முடிவதில்லை. எங்கள் சாலையில் தெரு விளக்கு கூட எரிவதில்லை. பள்ளிகள் திறந்துவிட்டன. எப்படி நாங்கள் பணிகளை செய்வது. புகார் அளிப்பதற்காக லைன்மேன், பொறியாளர்கள் யாருக்கு அழைத்தாலும் எடுப்பதில்லை. நள்ளிரவில் நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளனர்"












Click it and Unblock the Notifications