பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தில் குட்நியூஸ்.. 47 லட்சம் விவசாயிகளுக்கு PM கிசான் உதவித்தொகை
சென்னை: அடையாள எண் பெற்ற அனைவருக்கும், பிரதமரின் விவசாய உதவித்தொகையை, மத்திய அரசு கட்டாயம் வழங்க வேண்டும். எனவே, அடையாள எண் வழங்கும் பணியை முழுமையாக மேற்கொள்ளும்படி, வேளாண் துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது, தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுவது விவசாயம்.. எனவேதான், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காகவும், விவசாய வளர்ச்சிக்காகவும், குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் திட்டம்தான் பிஎம் கிசான் எனப்படும் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா" திட்டமாகும். இதற்கு பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்றும் பெயர்.

இந்த திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு பண உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு ரூ.6000 பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பணத்தில், விவசாயிகள் தங்கள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்..
பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம்
இந்த பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 19 தவணையும் வழங்கப்பட்டுள்ளன.. கடந்த 10 நாட்களுக்கு முன்புதான், இந்த 19-வது தவணை விடுவிக்கப்பட்டது. இதுவரை இந்த திட்டத்தின்கீழ் ரூ.3.46 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, விவசாயிகளுக்கு, ஆதார் போன்று அடையாள எண் வழங்கும் பணியை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்து வருகின்றன .. இந்த அடையாள எண் இருந்தால் மட்டுமே, அந்த விவசாயிகளுக்கு மானிய உதவிகள், பயிர் இழப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுப்படுத்தியிருக்கிறது.
ஆவணங்கள் முறையாக அப்லோடு செய்யவில்லை
ஆனால், நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 47 லட்சம் விவசாய குடும்பங்கள் உதவித்தொகை பெற பதிவு செய்திருந்தாலும், வெறும் 22 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே, உதவித்தொகை சமீபத்தில் வழங்கப்பட்டதாம்.. ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யாததால், மற்ற விவசாயிகளுக்கு உதவித்தொகை இன்னமும் கிடைக்காமலேயே உள்ளது.
அதனால்தான், உதவித்தொகை கிடைக்காத 47 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு, அடையாள எண் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, இதுவரை 16 லட்சம் அடையாள எண்கள் வழங்கப்பட்டு விட்டன. எப்படியும் இந்த மாத இறுதிக்குள் எஞ்சிய பணிகளை முடிக்க, மாவட்ட கலெக்டர்கள், வேளாண்மை, தோட்டக்கலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
துரிதமாக நடக்கும் பணிகள்
அடையாள எண் பெற்ற அனைவருக்கும், பிரதமரின் விவசாய உதவித்தொகையை, மத்திய அரசு கட்டாயம் வழங்க வேண்டும்.. எனவே, அடையாள எண் வழங்கும் பணியை முழுமையாக மேற்கொள்ளும்படியும் வேளாண் துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவடையும் பட்சத்தில், அடுத்து வரும் தவணையை, 47 லட்சம் தமிழக விவசாயிகளுமே எளிதில் பெற முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications