எல்லாவற்றையும் சொல்லி சொல்லி அடைந்தார்.. ஒரு "கனவு" மட்டும் பலிக்கவே இல்லை.. மறக்க முடியாத பிரணாப்!
பிரதமர் பதவி மீது ஆசைப்பட்டார் பிரணாப் முகர்ஜி
சென்னை: பிரணாப் முகர்ஜி - ஒரு சகாப்தம் - சரித்திரத்தின் அடையாளத்தையும், தனிப்பட்ட முத்திரையையும் பதித்துவிட்டு சென்றுள்ளார்.. இருக்கிற பதவிகள் அனைத்தையும் வகித்த பிரணாப் முகர்ஜியால், கடைசிவரை தான் ஆசைப்பட்ட பிரதமர் பதவியை மட்டும் வகிக்கவே முடியவில்லை.. அது மட்டும் நிறைவேறாமலேயே போய்விட்டது.
முன்னாள் குடியரசு தலைவர் என்ற ஒரே ஒரு அடைமொழிக்குள் பிரணாப்பை அடைத்துவிட முடியாது.. பொதுவாக, எல்லோருக்கும் இளைஞராக உருவெடுத்த பிறகுதான் அரசியல் ஆர்வம் துளிர்க்கும்.. ஆனால் இவர் சின்ன வயசிலேயே அரசியல் சம்பந்தப்பட்ட பேச்சையே நிறைய பேசுவாராம். அதற்கு காரணம் இவரது அப்பாதான்.. மேற்கு வங்கத்தின் மிக முக்கிய, மூத்த காங்கிரஸ் தலைவர் கின்கர் முகர்ஜிதான்!
பிரணாப் அறிவை பார்த்து பிரமித்த பெற்றோர், நன்றாக படிக்க வைத்தனர்.. முதுகலைப் பட்டம் பெற்றார்,, சட்டம் பயின்றார்.. ஆனாலும், இவரது எழுத்துக்களே மக்களுக்கு அடையாளத்தை இவருக்கான பெற்று தந்தது... இவர் மிகச்சிறந்த பத்திரிகையாளர்.. போர்க்குணம் மிக்க எழுத்தாளர்.. அடிப்படையில் ஒரு டீச்சர்.. இப்படி பல பரிமாணங்களை பெற்றவர்.
பழுத்த அரசியல்வாதி.. நிறைந்த அனுபவம் கொண்ட நிதியமைச்சர்.. ஜனாதிபதியாக உயர்ந்து.. மறைந்த பிரணாப்!
போராட்டங்கள்
காங்கிரஸ் குடும்பம் என்பதாலோ என்னவோ, இறுதிவரை அக்கட்சிக்காகவே விசுவாசமாக இருந்தவர் பிரணாப்.. எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ எதிர்ப்புகள், விமர்சனங்களை தாண்டி ஜனாதிபதியாக அவர் பொறுப்புக்கு வந்தபோது வயசு 77... இந்த வயசில் இவர் ஜனாதிபதியாக பொறுப்பை ஏற்கிறார் என்றால், அவரது 45 வருட அரசியல்தான் மிகப்பெரிய பலமாக கை கொடுத்தது.. வேறு எந்த ஜனாதிபதியும் இந்த அளவுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது என்பதே இவர் ஸ்பெஷல்!
இந்திரா காந்தி
அரசியலின் ஆரம்ப கட்டத்திலேயே இந்திரா காந்தியின் நன்மதிப்பை பெற்றுவிட்டார்.. மிகசிறந்த வழிகாட்டியாக இந்திரா இருந்தார்.. அதனாலேயே இவரது அரசியல் பயணம் வேகம் எடுத்தது என்றுகூட சொல்லலாம்.. குறிப்பாக எமர்ஜென்சி சமயத்தில், இவர் வருவாய்துறை இணையமைச்சராக இருந்தார்... மிக லாவகமாக, திறன்பட தன் பொறுப்பை செய்ததால்தான், அடுத்த சில வருடங்களிலேயே நிதியமைச்சரானார். ஒரு பழுத்த அரசியல்வாதிபோல அன்றைய கூட்டங்களை இவர் வழிநடத்தினார்.. பிரதமர் இல்லாத நேரத்தில், மத்திய அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவதும் பிரணாப்தான்!
ராஜீவ் காந்தி
இந்திரா இறந்தபிறகு, பிரதமர் பதவிக்கு இவர் ஆசைப்பட்டது என்னவோ உண்மைதான்.. ஆனால், விருப்பமே இல்லாத ராஜீவை நிர்ப்பந்தத்தாலும், சூழல் காரணமாகவும் பிரதமராக பதவியில் அமர்த்தப்பட்டார்.. அந்த சமயத்தில் பிரணாப் கொஞ்சம் அப்செட் ஆகி, கட்சியை விட்டுவிலகினாலும், அவரால் காங்கிரஸை விட்டு இருக்க முடியவில்லை.. திரும்பவும் தன் தாய் வீட்டிற்கே வந்துவிட்டார். ஆனால், இவரை சரியாக பயன்படுத்தி கொண்டது நரசிம்மராவ்தான்.. திட்ட கமிஷன் துணை தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர் என மிக மிக முக்கிய பொறுப்புகள் பிரணாப்பின் அறிவுக்கும், செயலுக்கும் ஏற்ப வழங்கப்பட்டது.
சாதனைகள்
இதில் அவருக்கு சவாலாக இருந்தது, ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியின்போதுதான்.. பல்வேறு பிரச்சனைகளில் காங்கிரஸ் சிக்கி கொண்டிருந்தது.. அவைகளை நாசூக்காகவும், நயமாகவும் தீர்த்ததில் முக்கிய பங்கு பிரணாப்புக்குதான் போய் சேரும்.. இப்படி பல சாதனைகளை செய்து முடித்துவிட்டு, ஒரு கட்டத்தில் வயசாகிவிட்டதால், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்தபோதுதான், அவரை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஐ.மு கூட்டணி அறிவித்தது... அதில், அமோகமாக வெற்றி பெற்றார்.
சறுக்கல்கள்
காலமெல்லாம் காங்கிரசுக்கு தீவிரமாக பணியாற்றிய ஒரு தலைவருக்கு கிடைத்த அங்கீகாரமாகவே நாட்டு மக்கள் கருதினார்கள்.. காங்கிரஸ் தன் பலத்தை இழந்தபோதிலும், பல தேர்தல்களில் சறுக்கல்களை சந்தித்த போதிலும், அசுர பலம் பெற்று பாஜக மேலே சென்று கொண்டிருந்த நிலையிலும், அக்கட்சியை கண்ணியத்துடன் விமர்சித்தார்.. இணக்கமான போக்கையே பாஜகவிடம் கொண்டிருந்தார்.. அதனால் பாஜக தலைவர்களால் பிரணாப் மதிக்கப்பட்டார்.
மசோதாக்கள்
அதுமட்டுமல்ல, பாஜக நிறைவேற்றிய எத்தனையோ சட்ட மசோதாக்களுக்கு கையெழுத்திட்டு, குடியரசு தலைவர் என்ற பொறுப்புக்கு மரியாதையை கூட்டினார்.. இதனாலேயே பிரணாப்புக்கு பாரத ரத்னா வழங்க பாஜக அரசு முடிவு செய்தது என்றால், அது பிரணாப் மீது பாஜக வைத்திருந்த நன்மதிப்புதான் காரணம். அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் பலத்தையும், அது தன் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளையும் பாஜக அரசுக்கு நினைவுகூர்ந்தபடியே இருந்தார்.
பொருளாதாரம்
ஒருமுறை இவர் பேசும்போது, "பிரிட்டிஷாரின் பிடியில் இருந்த வரையிலும் பூஜ்ஜியமாக இருந்த இந்தியப் பொருளாதாரம், சுதந்திரத்திற்கு பின்னர் முன்னாள் பிரதமர் நேரு, நரசிம்மராவ், மன்மோகன்சிங் போன்றவர்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் தான் மேலோங்கி வந்தது" என்று ஆணித்தரமாக கூறினார். "பிரதமராகப் பதவி வகிக்க என்னைவிட பிரணாப் முகர்ஜிக்கே தகுதி அதிகம் இருந்தது" என்று மன்மோகன் சிங் பெருமிதத்துடன் கூறியதையும் நான் நினைவுகூர வேண்டி உள்ளது.
நூல்கள்
இவர் எழுதிய நூல்கள் பல்வேறு இளம் தலைவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இன்னமும் உள்ளது.. இவர் ஆசிரியராகவும் பணியாற்றியவர் என்பதால், ஒருநாள் இவர் ஆசிரியராக உருவெடுத்துவிட்டார்.. அன்று ஆசிரியர் தினம்.. அதனால் ஒரு நாள் டீச்சராக மாறியதுடன், டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சோஷியல் சயின்ஸ் பாடம் எடுத்து மகிழ்ந்தார்.
ஜல்லிக்கட்டு
தமிழ்நாட்டில், அன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து, அதை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது பிரணாப்தான்... பிரணாப் வகிக்காத பொறுப்புகளே இல்லை.. பிரதமர் பதவி மட்டுமே விடுபட்டுவிட்டது.. இந்த பதவிக்காகத்தான் அவர் இந்திரா மறைந்தபோதே ஆசைப்பட்டார்.. தன் ஆசையை வெளியே காட்டி கொள்ளவும் முடியாமல் தவித்தார்.
ஜனநாயகவாதி
இதற்கு மிக முக்கிய காரணம்,இவர் என்னதான் தீவிர காங்கிரஸ் விசுவாசியாக இருந்தாலும், காந்தி குடும்பத்தின் விசுவாசியாக இல்லை என்ற ஒரு பெயர் நின்றுவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.. ஆனால், தன் உயிர் மூச்சு பிரியும்வரை காங்கிரஸ்வாதியாகவே இறந்தார்.. கடைசிவரை நிஜமான ஜனநாயகவாதியாக வாழ்ந்தார்.. ஜனாதிபதி வரலாற்றில் முக்கிய தடத்தை பதித்து விட்டு போயுள்ளார் பிரணாப் முகர்ஜி!