திடீரென சென்னை வந்த பிரசாந்த் கிஷோர்! நாளை விஜயுடன் மேடை ஏறி 20 நிமிடம் சம்பவம் .. உஷாராகும் திமுக
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கிடையே இன்று மீண்டும் பிரசாந்த் கிஷோர் சென்னை வந்த நிலையில் நாளை விஜயுடன் அவர் மேடை ஏற உள்ளது உள்பட பிற முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தார். கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. 2வது ஆண்டு தொடங்கி உள்ளது.

இந்த காலக்கட்டத்தில் நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளார். 2026 ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலை குறிவைத்து அவர் பணியாற்றி வருகிறார். இப்போது தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் உள்பட பிற நிர்வாகிகளை நடிகர் விஜய் நியமனம் செய்துவிட்டார்.
மேலும் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் களநிலவரங்களை அறிந்து கொள்ளும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி தேர்தல் வியூக வகுப்பாளர்களுடன் ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் - விஜய் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொணடனர்.
அப்போது சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளுவது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் முக்கிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். பூத் கமிட்டி அமைப்பதன் முக்கியம், இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து செயல்படுவது உள்பட பல்வேறு விஷயங்களை பிரசாந்த் கிஷோர் ஆலோசனையாக விஜய்க்கு வழங்கி உள்ளார்.
ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அப்போது திமுகவுக்கு பிரசார வியூக வகுப்பாளராக செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர் தான். இதனால் தமிழக களநிலவரம் என்பது அவருக்கு தெரியும். இதனால் நடிகர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு என்பது திமுகவை கலங்க வைத்துள்ளது.
இப்படியான சூழலில் தான் இன்று திடீரென்று பிரசாந்த் கிஷோர் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரசாந்த் கிஷோர் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பிரசாந்த் கிஷோரின் இந்த சென்னை வருகையின் பின்னணியில் நடிகர் விஜயும், தவெகவும் தான் உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை பூஞ்சேரியில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தான் பிரசாந்த் கிஷோர் சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாளைய தினம் சென்னையில் நடக்கும் ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர், நடிகர் விஜயுடன் ஒன்றாக மேடை ஏற உள்ளதாகவும், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பிரசாந்த் கிஷோர் 20 நிமிடம் வரை பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெக முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ளதால் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும்? என்பது பற்றி பிரசாந்த் கிஷோர் அறிவுரை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தவெகவின் இந்த நடவடிக்கையை திமுக உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications