தமிழர்கள் பற்றி பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும்? வட இந்தியர்களால் குற்றங்கள் அதிகரிப்பு.. சீமான்!
பிரசாந்த் கிஷோருக்கு தமிழ் மக்கள் பற்றி என்ன தெரியும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: வட மாநிலத்தவர்கள் வந்தால் மாநில நுழைவுச்சீட்டு வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு இடங்களில் வட மாநிலத்தவர்கள் தான் தமிழர்களை தாக்குவதாக கூறிய சீமான், பிரசாந்த் கிஷோருக்கு தமிழ் மக்கள் பற்றி என்ன தெரியும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் சம்பளம் குறைவாக கொடுத்தால் போதும் என்பதால், தமிழ்நாட்டு நிறுவனங்களும் முதலாளிகளும் வடமாநில தொழிலாளர்களையே பணியமர்த்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஃபாஸ்ட் புட் கடைகள், டீ கடைகளில் அதிகளவிலான வடமாநில தொழிலாளர்களே பணி செய்து வருகின்றனர்.

அவதூறு வீடியோ
இந்த நிலையில் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பது போலவும் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவதூறாக பரவி வருகிறது. அதேபோல் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சொந்த ஊருக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்களை, அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி வருவதாகவும் வதந்திகள் பரவியது.

தமிழ்நாடு வந்த பீகார் குழு
இதனைத் தொடர்ந்து அவதூறு பரப்பிய நபர்கள் குறித்து தமிழ்நாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பீகாரை சேர்ந்த அதிகாரிகள் குழுவும் தமிழகம் விரைந்தது. தமிழக அரசு உடனடியாக வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று விளக்கம் அளித்தது.

பிரசாந்த் கிஷோர் vs சீமான்
இதனிடையே, பீகார் மாநிலத்தை சேர்ந்தவரும் பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், தனது ட்விட் பதிவில் சீமான் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், 'தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது" என்று குற்றம் சாட்டிய பிரசந்த் கிஷோர் இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்பின் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும்?
இந்த நிலையில் சென்னையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், வட மாநிலத்தவர்கள் தான் இதுவரை தமிழ் மக்களை தாக்கியுள்ளனர். பிரசாந்த் கிஷோர் அவரது மாநிலத்தில் கட்சி தொடங்கப் போகிறார். அதனால் பீகார் மாநில மக்களுக்கு ஆதரவாக பேசுகிறார். அவருக்கு தமிழ் மக்கள் பற்றி என்ன தெரியும். நான் தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன்.

நுழைவுச்சீட்டு கட்டாயமாக்குக
வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருப்பதை முறைப்படுத்த வேண்டும். வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய முழு விவரமும் தமிழ்நாடு அரசிடம் இருக்க வேண்டும். ரயில்வே, என்எல்சி என மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வட மாநிலத் தொழிலாளர்கள் வருகைக்கு பின் தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்பதே உண்மை. வட கிழக்கு மாநிலங்கள் போல், வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாடு வந்தால் நுழைவுச்சீட்டு வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும். வட மாநிலத் தொழிலாளர்கள் வருகைக்கு பின், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications