நீங்க ஆளும் கட்சியாக இருக்க பீகாரில் இருந்து வந்தவர் தானே காரணம்.. எ.வ.வேலுக்கு பாஜக கேள்வி
சென்னை: பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர் என அமைச்சர் எ.வ வேலு விமர்சித்து இருந்த நிலையில், இதற்கு பாஜகவின் நாரயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக தமிழக அரசு நேரடியாக குற்றம் சாட்டியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒரு மசோதா கிடப்பில் போடப்பட்டால் அதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம் என பேசி கருத்து மோதலுக்கு வித்திட்டார்.

இதுமட்டும் இன்றி தொடர்ச்சியாக பல விவகாரங்களில் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கு இடையே மோதல் போக்கு உள்ளது. திராவிட மாடல் காலாவதியானது என்றும் ஆளும் திமுகவை சீண்டிய ஆளுநர், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தைக் கூட மறைமுகமாக விமர்சித்து இருந்தார். தமிழக முதல்வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மறுநாளே பேசியிருந்தார்.
இப்படி பல விஷயங்களில் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கும் நிலையில் மூத்த அமைச்சர்களும் ஆளுநரின் கருத்தை விமர்சித்து பேசி வருகின்றனர். அந்த வகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு கருணாநிதி நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக சாடி பேசினார்.
எ.வ.வேலு கூறுகையில், "பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர். மாநில சுயாட்சிக்கு ஆபத்து வந்துள்ளதாகவும் அதனை திமுக அரசு எதிர்கொண்டு வெற்றிபெறும் எனவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஆளுநர் குறித்த திமுக அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது:- தமிழ் நாட்டிலிருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை. பீகாரிலிருந்து தான் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநர் கூட பீகாரிலிருந்து தான் வந்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலும் சொல்லியிருக்கிறார். பீகாரிலிருந்து வந்த பிரஷாந்த் கிஷோரினால் தான் தமிழகத்தில் ஆளும் கட்சியாக, உங்களால் இப்படி பேசவே முடிகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications