பிரசித் கிருஷ்ணா முதல் ரிச்சர்ட்சன் வரை.. காயத்தால் விலகிய நட்சத்திர வீரர்கள்.. லிஸ்ட் இதோ!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள முக்கிய வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
சென்னை: ஐபிஎல் தொடரில் இருந்து பிரசித் கிருஷ்ணா, ரிஷப் பண்ட், பும்ரா, ஜேமிசன், ஜானி பேர்ஸ்டோவ், ஜை ரிச்சர்ட்சன் என்று ஏராளமான நட்சத்திர வீரர்கள் விலகியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் மிகப்பெரிய திருவிழா இன்னும் சற்று நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக 10 அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
10 அணிகளால் 60க்கும் அதிகமான போட்டிகள் விளையாடப்பட உள்ளது. இந்த நிலையில் பல்வேறு அணிகளின் முக்கிய வீரர்களும் காயம் காரணமாக விலகி வருகின்றனர். மும்பை, சென்னை, ராஜஸ்தான், பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளில் இருந்து முக்கிய வீரர்களில் விலகியுள்ளனர்.

பிரசித் கிருஷ்ணா
அதில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற காரணமாக அமைந்தார். இவர் இல்லாதது ராஜஸ்தான் அணிக்கு சற்று பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போல்ட்-க்கு இணையாக பந்துவீசும் வீரர் இல்லாமல் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

ஜானி பேர்ஸ்டோவ்
இதேபோல் பஞ்சாப் அணியின் முக்கியமான தொடக்க வீரரான பேர்ஸ்டோவ் காயம் காரணமாக விலகியுள்ளார். காலில் ஏற்பட்ட காயத்தில் சிகிச்சை பெற்று வரும் பேர்ஸ்டோவ், ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடிய பேர்ஸ்டோவ் 253 ரன்கள் விளாசியுள்ளார். அதேபோல் மயங்க் அகர்வாலை கழற்றிவிட்ட பஞ்சாப் அணி, தற்போது பேர்ஸ்டோவ் இல்லாததை சமாளிக்க என்ன செய்யப் போகிறது என்பதே கேள்வியாக உள்ளது.

ரிஷப் பண்ட்
அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், இன்னும் காயத்தில் இருந்து மீளாமல் உள்ளார். அதிலும் வலது காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தொடக்கம் முதலே டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பண்ட், தந்தை மறைந்த போதும் கூட ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர். சாதாரண வீரராக இருந்து கேப்டனாக உயர்ந்த நேரத்தில், விபத்தில் சிக்கியுள்ளார். அவருக்கு பதிலாக வார்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்டாலும், தற்போது ரிஷப் பண்ட் அளவிற்கு விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பை அணிக்கு பின்னடைவு
மும்பை அணிக்காக முதல்முறையாக களமிறங்கவிருந்த ஜை ரிச்சர்ட்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ள நிலையில், அவருக்கு பின் சிறப்பாக பந்துவீசக் கூடிய ஜை ரிச்சர்ட்சன் விலகியுள்ளது அந்த அணி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட உள்ள ஒரே வீரராக ஆர்ச்சர் மட்டுமே இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் பும்ரா, சென்னை அணியின் ஜேமிசன், பெங்களூரு அணியின் விக் ஜேக்ஸ் ஆகியோரும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications