அரக்கோணத்தில் ரயிலை கவிழ்க்க முயன்ற உத்தராகண்ட் சாமியார்.. சிசிடிவி காட்சியை வைத்து தூக்கிய போலீஸ்!
சென்னை: அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டவாள இணைப்புகளில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க அவர் முயற்சி செய்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சாமியார் ஒருவர் இந்த சதிச் செயலில் ஈடுபட்டது அம்பலம் ஆனது.
ரயிலை கவிழ்க்க சதி வேலையில் ஈடுபட்ட சாமியார் புகைப்படத்தை தமிழ்நாடு முழுவதும், மற்றும் ஆந்திராவுக்கும் அனுப்பி வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் வளைவு என்ற இடத்தில் சில வாரங்களுக்கு முன்னர் ரயில்வே தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்டுகள் வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை உரிய நேரத்தில் கண்டுபிடித்து அகற்றியதால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து அரக்கோணம் வழியாக புதுச்சேரி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பியது.
அரக்கோணம் பகுதியில் 5 ரயில்வே தண்டவாளங்களில் கற்கள், இரும்பு போல்டுகள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன. இது தொடர்பாக அரக்கோணம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சாமியார் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே போலீசார் தேடி வந்தனர்.
இதேபோல ஆந்திராவின் கட்சிகுடா பகுதியிலும் ரயில்வே தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட்டுகள் வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி நடந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு - ஆந்திரா ஆகிய இரு மாநில போலீசாரும் சந்தேக நபரான அந்த சாமியாரைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது ரயில்களைக் கவிழ்க்கும் சதி நோக்கத்துடன் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்டுகளை வைத்த சாமியார் ஹோம் என்பவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவி உடை அணிந்த அந்த சாமியார், ரயில் தண்டவாளங்களில் கற்கள், போல்ட்டுகளை வைத்து ரயிலை கவிழ்க்கும் முயற்சியில் எதற்காக ஈடுபட்டார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications