ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பா? போலீசாரின் திட்டம் இதுதான்.. பிரேமலதா காட்டம்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பிருப்பதாக சொல்வதா என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், புதிதாக கட்டப்பட்டு வரும் அவரது வீட்டுக்கு அருகிலேயே படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மாதவரம் ரெட்டேரி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் செல்லும்போது ரவுடி திருவேங்கடம் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து நடந்த தொடர் விசாரணையில் இந்த வழக்கில் மேலும் மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான பெண் தாதா மலர்க்கொடி, மற்றொரு வழக்கறிஞரும் தமாகா நிர்வாகியாக இருந்தவருமான ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆற்காடு சுரேஷின் தோழியும், பெண் தாதாவுமான புளியந்தோப்பு அஞ்சலை சம்பந்தப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அஞ்சலையை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ஓட்டேரி பகுதியில் பதுங்கி இருந்த அஞ்சலையை கைது செய்த தனிப்படை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 16 வது நபராக ஹரிதரன் என்பவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்ஃபோன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூரைச் சேர்ந்த தேமுதிக நகர செயலாளர் மணிகண்டன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின் முடிவில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே பாஜக, திமுக, அதிமுக, தமாகா என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்து, அவர்கள் அந்தந்த கட்சிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேமுதிக பிரமுகர் ஒருவரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிக நிர்வாகியான வழக்கறிஞர் மணிகண்டனும் விசாரிக்கப்பட்டதால், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேமுதிகவுக்கும் தொடர்பிருப்பதாக சொல்வதா? என தேமுதிக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சியினரையும் விசாரணை வலைக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு காவல்துறை செயல்படுகிறது என தகவல் வருகிறது. தேமுதிகவை சேர்ந்த திருவள்ளூர் நகர செயலாளர் மணிகண்டனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறான செய்தி. விசாரணை என்ற பெயரில் அழைத்துப் பேசியுள்ளனர்.
விசாரணையில் எதுவும் நிரூபிக்கப்படாததால் அவரை இந்த வழக்கில் உட்படுத்தாமல் அனுப்பிவிட்டனர். இதுதான் நேற்று நடந்திருக்கிறது. அதற்குள் தேமுதிகவிற்கும் தொடர்பு இருக்கிறது என்ற முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் அளித்த எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும் இது கண்டிக்கதக்கது.” என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications