சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும்.. கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியையே தேமுதிக அமைக்கும் என்றும் எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் தெளிவாக அறிவிப்போம் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் "உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களைத் தேடி மக்கள் தலைவர்" என்ற சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட சுற்றுப்பயணம் நிறைவடைந்து நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா.

அப்போது பேசிய அவர், "பெண்களை பாதுகாக்க சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியையே தேமுதிக அமைக்கும் என்றும் எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் தெளிவாக அறிவிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில் அனைத்து சுற்றுப்பயணங்களிலும் மக்கள் தங்களை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது, "தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் விலகுவது என்பது அவரவர்கள் விருப்பம். ஏதோ காரணத்திற்காக அவர்கள் விலகுகிறார்கள். நாம் ஏதும் கருத்து கூற முடியாது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "ஜிஎஸ்டி வரி குறைப்பால் விவசாயிகள் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள். தேமுதிகவும் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறது. தற்போது குறைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியால் மக்களின் வாழ்வாதாரம் உயரும், வேலை வாய்ப்பு உருவாகும். ஜிஎஸ்டி வரி குறைப்பு விவசாயிகளுக்கும் பெரிய உதவியாக இருக்கும். வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் அளவிற்கு வரி விதித்த நிலையில், உலகமே இந்தியா பொருளாதார அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் என பேசி வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்ததுடன் மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லது நடந்தால் எவராக இருந்தாலும் பாராட்ட வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications