விருத்தாசலத்தில் கேப்டன் சென்டிமென்ட்.. பிரேமலதா விஜயகாந்துக்கு கூடுதல் பலன்? முன்னிலையில் தேமுதிக
சென்னை: கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலம் தொகுதியின் மீது ஆர்வம் குவிந்திருக்கிறது. இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், இந்தத் தொகுதியில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தபால் வாக்குகள் எண்ண துவங்கியதில் இருந்தே தேமுதிகவின் பிரேமலதா முன்னிலையில் இருந்து வருகிறார். இது தேமுதிக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை, நம்பிக்கையை தந்து வருகிறது,
தேமுதிகவின் நிறுவனத் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த், அரசியலில் காலடி எடுத்து வைத்து முதன்முதலில் வெற்றிக் கொடி நாட்டிய இந்த "சென்டிமென்ட்" தொகுதியில், தற்போது அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார்.

விருத்தாசலம் தொகுதியைப் பொறுத்தவரை சுமார் 2,37,836 வாக்காளர்கள் உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் 86 சதவீத வாக்குகள் பதிவாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனர்.
இன்று காலை 8:30 மணி அளவில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே, கள நிலவரம் பரபரப்பானது. ஆரம்ப கட்ட நிலவரப்படி, திமுக கூட்டணியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இது தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும் இந்த வெற்றிப் பயணம் அவருக்கு அத்தனை எளிதானதாகத் தெரியவில்லை. பாமக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழரசி, பிரேமலதாவிற்கு கடும் சவாலை அளித்து வருகிறார்.
வன்னியர் சமூக மக்கள் கணிசமாக வாழும் இந்தத் தொகுதியில், பாமகவின் வாக்கு வங்கி மிக முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், டாக்டர் தமிழரசி உள்ளூர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதும், அவர் செய்துள்ள மக்கள் பணிகள் அவருக்குச் சாதகமான அம்சங்களாகப் பேசப்படுகின்றன.
இவர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஆனந்தி ஆகியோர் 4 முனைப் போட்டியில் களம் காண்பதால், வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இழுபறி நீடிக்கலாம் எனக் கருதப்படுகிறது. விஜயகாந்த் 2006-ல் எவ்வித கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை வீழ்த்திச் சரித்திரம் படைத்த அதே மண்ணில், இன்று அவரது வாரிசுகள் வெற்றியைத் தக்கவைக்கப் போராடுகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி, திமுகவின் பலம் மற்றும் விஜயகாந்த்
முன்னிலையில் அமர வைத்து வருகிறது..
"கேப்டன்" முதன்முதலில் சட்டமன்றத்திற்குள் நுழைந்த இந்தத் தொகுதி, மீண்டும் அவரது குடும்பத்திற்குக் கைகொடுக்குமா அல்லது பாமகவின் உள்ளூர் செல்வாக்கு வெற்றியைத் தட்டிச் செல்லுமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருக்கிறது, இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications