முதல்வர் ஸ்டாலினை வீட்டுக்கே போய் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்.. திரும்பிப் பார்க்கும் தலைகள்!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை நலம் விசாரித்தார். முதல்வர் ஸ்டாலின் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது தேறியுள்ள நிலையில் நேரில் சந்தித்தார் பிரேமலதா.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், மூன்று நாட்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை தலைமைச் செயலகம் செல்வதற்கு முன்னதாக, தனது வீட்டுக்கு வருகை தந்த பிரமலதா விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும், அண்மையில் மறைந்த மு.க.முத்து மறைவுக்கும் ஆறுதல் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு, தேமுதிக பொருளாளார் எல்.கே சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கடந்த தேர்தல்களில் பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்ட நிலையில், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பையும் தேமுதிக வெளியிடவில்லை. வரும் ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி தொடர்பாக அறிவிக்கப்படும் என பிரேமலதா கூறி வருகிறார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத் துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. மேலும் மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சை முறை அப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட்டது. பின்னர் ஓய்வுக்குப் பிறகு வீடு திரும்பினார் ஸ்டாலின்.
முன்னதாக பிரேமலதா விஜயகாந்த், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாளில் வீடு திரும்புகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியடைகிறது. அவர் பூரண நலம் பெற்று நீடூடி வாழ வேண்டும். மக்கள் பணிகளை மீண்டும் தொடர்ந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் முதல் கட்ட சுற்றுப்பயணம் செய்கிறார். தேமுதிக சார்பில் மாநில அளவிலான பிரசாரம் வருகிற 3ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்காக பாதுகாப்பு அனுமதி கோரி தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தமிழக போலீஸ் டி.ஜி.பியிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications