பிரேமலதாவை சந்தித்த அதிமுக நிர்வாகி.. தேமுதிகவை இழுக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி.. மாறும் கணக்கு!
சென்னை: தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி சந்தித்துள்ளார். திருப்பத்தூரில் பரப்புரையில் ஈடுபட்டு வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை திடீரென கேசி வீரமணி சந்தித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் ஏராளமான கட்சிகள் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் இருக்கின்றன. அந்த வகையில் தேமுதிக இம்முறை யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த மாதம் தேமுதிக பொருளாளர் சுதீஷ் காங்கிரஸ் கட்சியின் விழா ஒன்றில் பங்கேற்று, திமுக நிர்வாகிகளுடன் நெருக்கம் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டிற்கே சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார். முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பதற்காக சென்றதாக விளக்கம் அளிக்கப்பட்டாலும், திமுக கூட்டணியில் இணைய தேமுதிக இணைய வாய்ப்புகள் உள்ளதாகப் பேச்சுகள் எழுந்தன.
தேமுதிக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே திமுகவுடன் கூட்டணி அமைத்ததில்லை. 2016ல் திமுக எப்படியாவது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்ட போதும் கூட, அது கைகூடவில்லை. இதன்பின் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் ஸ்டாலின் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சித்தார். ஆனாலும் தேமுதிக ஏற்கவில்லை.
இந்த நிலையில் இந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக விருப்பம் தெரிவித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே தேமுதிகவால் ஒரு எம்எல்ஏ அல்லது ஒரு எம்பியை கூட உருவாக்க முடியவில்லை. இதனால் விஜயகாந்த் மறைவுக்கு பின் கட்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், எம்எல்ஏ-க்கள் தேவை என்பதை பிரேமலதா விஜயகாந்த் உணர்ந்துள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டே பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் தேர்தலுக்கு முன்பாக பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருப்பத்தூரில் பரப்புரை மேற்கொண்டு வந்த பிரேமலதா விஜயகாந்தை திடீரென அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி சந்தித்துள்ளார்.
அப்போது தேமுதிக பொருளாளர் சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதனால் அதிமுக தரப்பில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தேமுதிக உடன் தொடங்கப்பட்டிருப்பதாகப் பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பாகவே தேமுதிக எங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
தேமுதிகவுக்கு கொடுக்கப்பட வேண்டிய மாநிலங்களவை எம்பி பதவி 2026ல் நிச்சயம் கொடுக்கப்படும் என்றும் உறுதி தெரிவித்திருந்தார். இதனால் தேமுதிக 2 பெரிய கட்சிகளில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ஜனவரி மாதம் கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பிரேமலதா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications