விளையாட்டு துறைக்கு உதயநிதி என்ன செய்தார் என விவாதிக்க தயாரா - அதிமுக ஜெயகுமார் சவால்
சென்னை: திமுக, பாஜக இருவரும் ஒரு புரிதலில் இருப்பதால் மக்களுடைய பிரச்சனைகள் குறித்து அவர்கள் பேசுவதில்லை. விளையாட்டு வீரர்களை எந்த வகையில் திமுக ஊக்குவித்துள்ளது. விளையாட்டு துறைக்கு உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விவாதிக்க தயாரா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சவால் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, சென்னை மயிலாப்பூரில் மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி இன்று துவங்கப்பட்டுள்ளது. அதிமுக அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார். பின்னர், இளைஞர்களுடன் ஜெயக்குமார் கிரிக்கெட் விளையாடினார்.

இதைத்தொடர்நது, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா பிறந்த நாளில் சமுதயாத்துக்குப் பயன்படும் வகையில் பல்வேறு நல்லத்திட்ட உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு வழக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு அதிமுக 3 சதவீத இடஒதுக்கீட்டை அளித்தது. இதேபோல இட ஒதுக்கீடு போன்ற முக்கியத்துவத்தை அரசு வேலைகள் உள்ளிட்டவற்றில் திமுக அரசு கொடுத்துள்ளதா?. விளையாட்டு வீரர்களை எந்த வகையில் திமுக ஊக்குவித்துள்ளது. சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினால் மட்டும் போதாது.
பர்மா பஜாரில் விற்கும் கோப்பையை வாங்கி ஸ்டாலினையும், சம்பந்தப்பட்ட அமைச்சரையும் ஏமாற்றியது எங்களுக்குத் தெரியாதா. இதுதான் இந்த அரசின் சாதனை. விளையாட்டுத் துறையை ஊக்கப்படுத்த அவர்கள் எதுவும் செய்யவில்லை. நான்கு ஆண்டுகளில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி என்ன திட்டங்களை தமிழகத்துக்காகவும், விளையாட்டுத் துறைக்காகவும் கொண்டு வந்தார் என்பதை வெளிப்படையாக அவர் கூற தயாரா.
சமூக வலைத்தளங்களில் மட்டுமே திமுக அரசின் பிரசாரங்கள் நடக்கிறது. ஆனால், உயர்ந்து வரும் விலைவாசி குறித்தோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியோ திமுகவினர் வாய் திறப்பதில்லை. அரசுத் துறையில் லட்சக்கணக்கிலான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதனை நிரப்புவதற்கு ஸ்டாலின் அரசு எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
திமுக, பாஜக இருவரும் ஒரு புரிதலில் இருப்பதால் மக்களுடைய பிரச்சனைகள் குறித்து அவர்கள் பேசுவதில்லை. மும்மொழிக் கொள்கை அமல்படுத்திய மாநிலங்களில் வளர்ச்சி என்பது இல்லை. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் தான் 40 சதவீத மாணவர்கள் உயர்கல்வி பயின்று கல்வித் துறை வளர்ச்சி பெற்றுள்ளது. மற்ற எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகம் கல்வித் துறையில் வளர்ச்சி பெற்றுள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கடிதம் எழுதுவதை தவிர முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார். திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பொழுதெல்லாம் முத்தரப்பு பேச்சுவார்த்தையை திமுக அரசு நடத்தி இருக்கிறதா.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது, தாக்குவது, மீனவர்களின் உடைமைகளை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதனைத் தடுக்க ஸ்டாலின் அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. பத்து சதவீதமாக இருந்த மீனவர்கள் மீது தாக்கப்படும் சம்பவங்கள் தற்போது 100 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications