பணப்புழக்கத்தை கொண்டு வந்து இருக்கோம்.. விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காது.. அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சென்னை: தக்காளி விலை மட்டும் இன்றி சில மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து மக்களை கதி கலங்க வைத்து வரும் நிலையில், விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
சமையலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவு பொருள்களில் ஒன்றான தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து மக்களை கலங்க வைத்துள்ளது. தக்காளி விலை தொடர்ந்து அதிக விலையில் இருப்பதால் இல்லத்தரசிக்ள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படுகிறது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும் சூழலே உள்ளது. தக்காளி விலை மட்டும் இன்றி வேறு சில அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. வரத்துக் குறைவு காரணமாக சென்னையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது. துவரம் பருப்பின் விலை கிலோ 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விளைச்சல் குறைந்ததன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு வரும் மளிகைப் பொருட்களின் வரத்து குறைந்து இருப்பதாகவும் இதுவே விலையேற்றத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
துவரம் பருப்பை தவிர பாசிப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் 20 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து இருப்பது மக்களை கதி கலங்க வைத்துள்ளது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் பணபுழக்கத்தை கொண்டு வந்துவிட்டதாகவும் விலை வாசி உயர்வு மக்களை பாதிக்காது என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், "சாதாரண கூலித்தொழிலாளி கூட தினமும் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்து விட்டோம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிறது. வேலை வாய்ப்புகள் தாரளமாக உள்ளன. கட்டுமான தொழில்கள் ஆங்காங்கே நடக்கிற காரணத்தினால் மக்கள் மத்தியில் பணபுழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விலை வாசி உயர்வு காரணமாக மக்கள் அதற்கு பெரும் சிரம்ப்படும் மாதிரி இல்லை...
வருவாயும் கூடுதலாக ஆகிறது. வருமானம் கூடுவதால் ஓரளவு சரியாகிறது. தக்காளி என்பது சீசன் பொருள். மழை காலத்தில், வெயில் காலத்தில் சீசனுக்கு ஏற்றார் போல் விளைகிறது. அது ஒரு 10 நாள்தான் இருக்கும்.. ஏற்றம் இறக்கம் எல்லாம்.. சாதாரணமாக போய்விடும். அதைக்கூட கட்டுப்படுத்ததான் ரேஷன் கடைகள் மூலமாக அரசு தக்காளி வாங்கி மக்களுக்கு எளிதாக கொடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications